இதபடிங்க முதல்ல! வேலூர் வீரர்கள் பங்கேற்ற முதல் உலகப்போர்! பராமரிப்பின்றி நினைவு சின்னம்!

ம.பா.கெஜராஜ்,

உலகப்போரில் 14 பேர் இன்னுயிர் ஈந்தததை நினைவு கூறும் வகையில் வேலூரில் அமைக்கப்பட்ட நினைவுச் சின்னம் தற்போது பராமரிப்பின்றி ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியிருக்கிறது. மணி கூண்டு வடிவில் உள்ள இதன் மீது மாவட்ட நிர்வாகம் பார்வையை திருப்ப வேண்டும் என்பது உள்ளூர்வாசிகளின் விருப்பம்.

 பல்வேறு பெருமைகளை தன் வசப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கிறது வேலூர் மாவட்டம்.

 குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் அகழி சூழ்ந்த தரை கோட்டை, சிப்பாய் புரட்சி நடந்த விதம், நூற்றாண்டுகளைக் கடந்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை என பலரும் அறிந்த வரலாற்று விஷயங்களை உள்ளடக்கியிருக்கிறது.

 இருந்தாலும் சுட்டிக்காட்டப்படக்கூடிய மேலும் பல வரலாற்று சம்பவங்கள் இங்கு உண்டு.

 அந்த வகையில்க் முதல் உலகப்போரை மையப்படுத்தி ஒரு தகவலை எடுத்துக் கூறலாம்.

   1914 ஆம் ஆண்டு முதல் 1919 ஆம் ஆண்டு வரை முதல் உலகப்போரில் பிரிட்டிஷ் ராணுவத்தினருக்காக நமது வடாற்காடை (முந்தைய ஒருங்கிணைந்த மாவட்டம்)  சார்ந்த சிப்பாய்கள்  போரில் கலந்து கொண்டனர்.

 அந்த வகையில் மொத்தம் 277 வீரர்கள் போரில் களம் கண்டனர்.   

   இந்த போரில் கலந்து கொண்ட 277 வீரர்களில் 14 வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தனர்.

அதை நினைவு கொள்ளும் வகையில் வேலூரில் மையப் பகுதியில் உள்ள லாங்கு பஜார் மார்க்கெட் நுழைவு வாயிலில் ஒரு மணிக்கூண்டு அமைக்கப்பட்டு அதில் மேற்கண்ட விஷயங்களை பளிங்குகற்களால் செதுக்கி வைத்திருக்கிறார்கள்.

 தற்போது அந்த மணிகூண்டு பார்க்க பரிதாபமாக பராமரிக்கப்படாமல் இருந்தாலும் கூட, அதில் பளிங்கு கற்களில் பொறிக்கப்பட்டிருக்கும் அந்த எழுத்துக்கள் மட்டும் பளிச்சென்று தெரிகிறது.

  ஐந்தாம் மன்னர் ஜார்ஜ் மற்றும் ராணி மேரி ஆகியோர்  முடி  சூட்டிக்கொண்ட நினைவுகளை கொண்டாடும் அமைக்கப்பட்ட மணி கூண்டு இது.

  இதில், உலகப்போரில் பங்கேற்ற வீரர்களை பற்றின தகவல்கள்களை வரும் கால சந்ததியினர் அறிந்துக் கொள்ளும் வகையில் இடம் பெற செய்திருக்கிறார்கள் ஆங்கிலேயர்கள்.

 ஆனால் தற்போதைய சூழலில் இந்த மணி கூண்டு எதற்காக எழுப்பப்பட்டது என்பதைப் பற்றி  துளிகூட மக்களுக்கும் புரியவில்லை அதிகாரிகளுக்கும் தெரியவில்லை.

 அந்த நினைவு கூண்டு மண்டபத்திற்கு ஐந்தாம் ஜார்ஜ் விக்டோரியா மகாராணியின் முடிச்சுட்டு நினைவு கிரீடம் நினைவு மணிக்கூண்டு என்றுஆங்கிலத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

"KING GEORGE V QUEEN MARY CORONATION CLOCK TOWER"

அதேபோல் பங்கேற்ற வீரர்களின் தகவல்களும் உயிர் நீத்தவர்களின் தகவல்களும் அதில் ஆங்கிலத்தில் இடம்பெற்று இருக்கின்றன.

"FROM THIS VILLAGE 277 MEN WENT TO THE GREAT WAR 1914 TO 1919

OF THESE 14 GAVE UP THEIR LIVES " என்கிற வாசகம் இடம்பெற்றுள்ளது.

அந்த அளவுக்கு நமது போர் வீரர்களுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் கௌரவம் அளித்து அமைக்கப்பட்டுள்ள அந்த மணி கூண்டை இனிமேலாவது பராமரித்து பொலிவாக வைத்துக் கொள்வதுடன், அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை  அகற்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்திருக்கிறது.

 இது குறித்து சமூக பார்வைக்கொண்ட ம.ராஜ்குமார் என்பவர் தெரிவிக்கையில், உலகப்போரில் பங்கேற்றவர்கள் மற்றும் வீர மரணம் அடைந்தவர்கள் குறித்த வரலாற்றை வரலாற்றை புறக்கணித்தால், நாளைக்கு நம்மை வரலாறு புறம் தள்ளும். வேலூர் லாங்கு பஜார் மார்க்கெட் வியாபாரிகளால் ஆக்கிரமிப்பில் சிக்கியிருக்கும் மணிகூண்டை அரசு மீட்டெடுத்து, அதை பராமரிக்க வேண்டும் என்று கோருகிறோம்.

  குறிப்பாக பழமை மாறாமல் அந்த நினைவு சின்னத்தை சீரமைக்க வேண்டும். அதன் பின்னர் அங்கு மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாதபடிக்கும், அதே போல் மணிகூண்டை பாதுகாப்பாகவும் வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.