டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்! தீயணைப்பு துறை ஆட்டையை போட்டது எவ்வளவு!

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்! தீயணைப்பு துறை ஆட்டையை போட்டது எவ்வளவு!

 நரேஷ்.என், புதுடெல்லி,

  டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா. அவர் 2025 மார்ச் 14ம் தேதி வீட்டில் இல்லாத போது, தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கச் சென்றனர்.

 அப்போது, அந்த வீட்டின் பல அறைகளில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டதாக தகவல். இது காட்டுத்தீ போல நாடு முழுவதும் உள்ள ஊடகங்களுக்கு இறையானது.

இது குறித்த செய்தி வெளியே வந்தபின், உச்ச நீதிமன்ற கொலீஜியம் அவசரமாக கூடி நீதிபதி யஷ்வந்த் வர்மாவை ஏற்கனவே பணிபுரிந்த அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றப்பட்டார்¢ நீதியரசர் யஷ்வந்த் வர்மா.

   இந்நிலையில் நீதியரசர் யஷ்வந்த் வர்மா வீட்டில், தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்ட ஏராளமான பணம், எந்த வகையில் வந்தது என்பது தொடர்பாக, சம்பந்தப்பட்ட நீதிபதியிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

   ஆனால், அவரிடம் இருந்து ஏற்கத்தக்க விளக்கம் கிடைக்காததால், உடனடியாக, டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விசாரணை நடத்தி நேற்று (21/03/2025) அன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தார். 

   அந்த அறிக்கையை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உச்ச நீதிமன்றத்தின் 4 மூத்த நீதிபதிகளைக் கொண்ட கொலீஜியத்தால் பரிசீலிக்கப்பட்டது. அதன் பிறகு உச்ச நீதிமன்றத்தின் ஆலோசகர்கள் (நீதிபதிகள்), சம்மந்தப்பட்ட உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதி யஷ்வந்த் வர்மா ஆகியோருக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், அறிக்கையை ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கைகளுக்கு செயலாக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிக்கை  வெளியிட்டுள்ளது.

   அனுப்பப்பட்ட அந்த கடிதத்தில், டெல்லி உயர் நீதிமன்றத்தின் 2வது மூத்த நீதியும், கொலீஜியத்தின் உறுப்பினருமான நீதிபதி யஷ்வந்த் வர்மாவை, ஏற்கனவே பணியெடுத்த அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கான, சீனியாரிட்டி அடிப்படையிலான முன்மொழிவு என்றும், இது சுயாதீனமானது என்றும், விசாரணை நடைமுறையில் இருந்து இது வேறுபட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  மேலும், பணம் மீட்கப்பட்ட சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பெறப்பட்ட பதில்கள் ஆராயப்படும் என்றும் அதன்பிறகு, கொலீஜியம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றும் என்றும் உச்ச நீதிமன்ற செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முறைப்படி என்ன நடந்திருக்க வேண்டும் என்று சில மூத்த சட்ட நிபுணர்கள் கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்கள்.

 அதில் விசாரணைக் குழு, குற்றச்சாட்டுக்கு ஆளான நீதிபதியை அழைத்து, விசாரித்து அறிக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும்.

   அந்த அறிக்கையில் குற்றம் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட நீதிபதியை ராஜினாமா செய்யச் சொல்லி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வற்புறுத்த வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட நீதிபதி மறுத்தால், அவர் பணியாற்றும் உயர் நீதிமன்றத்தில் அவருக்கான பணிகளை வழங்காமல் நிறுத்தி வைக்குமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

  அதன் பின்னர் குற்றம் செய்த நீதிபதிக்கு எதிராக அவரை பதவி நீக்கம் செய்ய, நடவடிக்கைகளை தொடங்குமாறு, பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முறைப்படி தகவல் தெரிவிக்க வேண்டும்.

  அதன் பிறகு, நாடாளுமன்றத்தில், குற்றம் சாட்டப்பட்ட நீதிபதிக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும். அதற்கு, மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் ஆதரவோடுதான் நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முடியும்.

  நமது அரசியல் சாசன சட்டமானது, நீதிபதிகளுக்கு எந்த அளவிற்கு பாதுகாப்பு கவசங்களை வழங்கி உள்ளது என்பது, இதன் மூலம் உணர முடிகிறது அல்லவா. கடவுளுக்கு இணையான இடத்தில் இருந்துகொண்டு, காசுக்காக ஒருசிலர் செய்யும் நடைமுறைக்கு ஏற்க முடியாத தீர்ப்புகளை கொடுத்தும், ஒவ்வாத ஏற்க முடியாத சிலவற்றை ஞாயப்படுத்துவதையும் பார்க்கும்போது, நாட்டின் 4 தூண்களில் ஒன்றான நீதித்துறை சிதிலமடைந்துள்ளதாகத்தான் எண்ணத் தோன்றுகிறது. 

அய்யா சில டவுட்டு.

  1. நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில், தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்ட பணத்தின் மதிப்பு எவ்வளவு?
  2. மீட்கப்பட்ட பணம் எங்கே? தீயணைப்புத்துறை ஆட்டையை போட்டுவிட்டதா?
  3. நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டு என்பது, அவரது வீட்டிலிருந்து ஏராளமான பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்பதுதான். அதை அவர் நேர்மையான வழியில் சம்பாதித்ததாக நிரூபித்தால் சரி. ஆனால், முறைகேடுகளில் சம்பாதித்து என்பது உறுதியாகி பதவி நீக்கம் செய்யப்படுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால், எந்தெந்த முறைகேடுகளில் அவர், இவ்வளவு பணத்தை சம்பாதித்தார்?
  4. முறைகேடுகளால் ஆதாயம் பெற்றவர்கள் யார் யார்?
  5. எந்த வகையில், நீதி வளைக்கப்பட்டு, யாருக்கெல்லாம் அநீதி இழைக்கப்பட்டது?
  6. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று சொல்லும் நாட்டில் குற்றவியல் சட்டத்தின்படி தண்டனை கொடுப்பது பற்றிய நிலைப்பாடு என்ன? முன்னுதாரணங்கள் என்ன?
  7. வெளிநாடுகளில் நீதிபதிகள் தவறு செய்தால் குற்றவியல் தண்டனை சட்டங்களுக்கு உட்படுத்தி சிறைக்கு அனுப்புகிறார்களே அது மாதிரி எல்லாம் நடக்குமா?
  8. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்குமா?

   குற்றவாளிக்கு, பணியிட மாற்றம், பதவி நீக்கம், முன்ஜாமீன் என்பவை போன்ற நடைமுறைகளை சொல்லிக் கொண்டு, இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இந்த நாட்டில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க போகிறார்களோ! கண்ணைக் கருந்துணியால் கட்டிக்கொண்டிருக்கும் நீதி தேவதைக்குத் தான் வெளிச்சம்.