ஆண்டுக்கு ஒரு பிரதமர் என்று கிண்டலடித்த மோடி! ஆளாளுக்கு இழுக்கும் கூட்டணிகள்! காங்கிரஸின் கேலிசித்திரம்! தள்ளிப்போகும் பதவி ஏற்பு!!!

ம.பா.கெஜராஜ்,
வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற ஜூன் 1-ஆம் தேதி பெரிய ரோடு ஷோ நடத்தி மூன்றாம் முறையாக பதவியேற்றுக் கொள்வார் மோடி என்று பாஜக போட்ட திட்டங்கள் அனைத்தையும் வாக்காளர்கள் கனவாக்கினர். தனிப்பெரும்பான்மையை எவருக்கும் அளிக்காமல் தொங்களில் விட்டனர்.
சந்திரபாபுவையும், நிதிஷையும் பா.ஜ.க. ஒப்பந்தம் போட்டு மடக்கிபிடித்து வைத்திருக்கின்றனர். ஆகவே அவர்கள் தயவில், வருகிற 8-ந்தேதி இரவு 8 மணிக்கு நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு அமைய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
எனவே மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடம் ஒதுக்குவது? பா.ஜ.க.வில் யார் யாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது? என்பது குறித்து பா.ஜ.க. மூத்த தலை தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
சந்திரபாபு காரு 6 கேபினெட் அமைச்சர் பதவிகளை கேட்டிருப்பதாகவும், குறிப்பாக நிதித்துறையை அளிக்கவேண்டுமென்று சொல்லியிருப்பதாகவும் தகவல். அதில்லாமல் இரண்டு இணை அமைச்சரும் கேட்டுள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் 3 முக்கிய மத்திய மந்திரி பதவிகளை கேட்கிறார். மேலும் ராஜாங்க மந்திரி பதவிகளையும் அவர் எதிர்பார்த்து பா.ஜ.க. மூத்த தலைவர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.
இப்படி சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரும் முக்கிய இலாகாக்களை கேட்டாலும் 6 முக்கிய அமைச்சகத்தை பாரதிய ஜனதா விட்டுக் கொடுக்க மறுத்துள்ளது. ரெயில்வே, உள்துறை, நிதி, பாதுகாப்பு, சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய 6 துறைகளையும் வேறு யாருக்கும் ஒதுக்க இயலாது என்று மோடி திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம்.
இது போன்ற குழப்பங்களால் 8 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற இருந்த மோடி பதவி ஏற்பு விழா தள்ளிப்போக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் மோடியை நிதிஷ் ஒருபக்கம் சந்திரபாபு மறுபக்கம் என இழுத்து வருகிறார்கள் என்று காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு கேலி சித்திரம் வெளியிட்டிருக்கிறது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, இந்தியா கூட்டணியில் ஆண்டுக்கு ஒரு பிரதமர், உங்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்றெல்லாம் கொக்கரித்த பாஜகவுக்கு மக்கள் அதையே பதிலாக திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள்.