அமைச்சர் துரைமுருகன் வீட்டு அறை கதவுகள் கடப்பாரையால் உடைக்கப்பட்டது!

ஜி.கே.சேகரன்,

  காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகனின் வீடு உட்பட 4 இடங்களில் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனையிட்டனர் - 11 மணி நேரம் நடத்தப்பட்ட நிலையில் அதிகாலைலவை நிறைவடைந்தது. அப்போது அவரது இரண்டு அறைகள் கடபாரை வைத்து உடைத்து திறக்கப்பட்டது.

 வேலூர்மாவட்டம், காட்பாடி காந்தி நகரில் உள்ள நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வீடுகளில்  நடைபெற்ற அமலாக்கத்துறையின் சோதனைகள் இன்று ஜன-4 ஆம் தேதி  அதிகாலை நிறைவடைந்தது.

 திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீடு வேலூர் அருகே காட்பாடி காந்திநகரில் உள்ளது. இந்த வீட்டில் அவரது மகனும் வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

   அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் சிஆர்பிஎப் காவலர்கள் பாதுகாப்புடன் அமைச்சர் துரைமுருகனின் வீடு மற்றும் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி, துரைமுருகனுக்கு நெருங்கிய கட்சி பிரமுகரான பூஞ்சோலை சீனிவாசன், இவரது உறவினர் தாமோதரன் ஆகியோர் வீடுகளில் நேற்று ஜன-3 ஆம் தேதி காலை 7 மணியளவில் சோதனையிட்டனர்.

  அப்போது, அமைச்சர் துரைமுருகன் சென்னையில் இருந்தார். எம்.பி. கதிர் ஆனந்த் குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார். இதனால், அமைச்சரின் வீட்டில் மட்டும் சோதனை தொடங்காத நிலையில் மற்ற இடங்களில் சோதனை நடைபெற்றது.

இதனால், அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதுதொடர்பாகக் கதிர் ஆனந்த் தரப்பிலிருந்து இ-மெயில் அனுப்பினால் அதன் அடிப்படையில் சோதனை நடத்தப்படும் என திமுக முக்கிய நிர்வாகிகளிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். காட்பாடி திமுக கிளை செயலாளர் வன்னியராஜா, வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார், வழக்கறிஞர் பாலாஜி ஆகியோர் முன்னிலையில் சோதனை நடத்த கதிர்ஆனந்த் தரப்பிலிருந்து அமலாக்கத்துறைக்கு மின்னஞ்சல் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 இதையடுத்து, சோதனை தொடர்பான ஆவணங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கையெழுத்திட்டனர். அந்த ஆவணத்தை  வன்னியராஜா, சுனில்குமாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகளை அவர்கள் சோதனை செய்த பிறகே வீட்டினுள் அனுமதித்தனர். இந்த சம்பிரதாயங்கள் முடிவதற்கு சுமார் 7 மணி நேர பிடித்தது.

 பின்னர், பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் தாமோதரன் ஆகியோர் வீடுகளில் சுமார் 7 மணி நேரம் நடைபெற்று முடிந்ததும், பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் இருந்த ஆவணங்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.

  மேலும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்த சோதனையில் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு உதவியாக பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சென்றனர்.

துரைமுருகன் வீட்டில் அமைச்சரின் தனி அறை பூட்டியிருந்ததால் அந்த அறையின் பூட்டை உடைக்க, இரும்பு கடப்பாரையை வீட்டினுள் கொண்டு சென்றனர்.

  அதிகாலை வரை சோதனை நீடித்தது. முன்னதாக,  இந்த சூழலில்  அமைச்சரின் வீட்டிற்கு முன்  திமுகவினர் திரண்டனர். திமுகவினர் அமருவதற்காக வீட்டின் முன்பு பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டன. அவர்களுக்கு டீ, சமோசா,மற்றும் அறுசுவை உணவு கொடுக்கப்பட்டது.

ஏற்கனவே நடந்த ரைடு.

 2019 மக்களவைத் தேர்தலில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது, 2019 மார்ச் 30-ம் தேதி அமைச்சர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ.10 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் தொடர்ச்சியாக கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி மற்றும் பூஞ்சோலை சீனிவாசன், உறவினர் தாமோதரன் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த ரூ.11 கோடியே 51 லட்சத்து 800 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், சுமார் ரூ.9 கோடி 200 ரூபாய் புத்தம் புதிய நோட்டுகளாக இருந்தது.

இதையடுத்து, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக காட்பாடி காவல் நிலையத்தில் தேர்தல் செலவு கணக்கு பார்வையாளர் அளித்த புகாரின் பேரில் கதிர்ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், புத்தம் புது ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் மற்றும் காட்பாடி கனரா வங்கி செஸ்ட் கிளை மேலாளர் தயாநிதி மீது வழக்குப்பதிவு செய்தனர். 2019-ல் வருமான வரி சோதனை நடந்த இடங்களில் தற்போது அமலாக்கத் துறை சோதனை நடந்தது நினைவுகூறத்தக்கதாகும்.