சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.17 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்! கில்லாடிகள் 6 பேர் கைது!

சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.17 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்! கில்லாடிகள் 6 பேர் கைது!

ம.பா.கெஜராஜ்,

  சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.17 கோடி மதிப்புள்ள 17.815 கிலோ போதைப் பொருளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பெண் உட்பட 6 பேர் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

   கடந்த 21-ம் தேதி மாதவரம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த திருவல்லிக்கேணி வெங்கடேசன், அவரது கூட்டாளியான அதேபகுதியைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.5 கிலோ போதைப் பொருள், 2 கார், ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், வெங்கடேசனிடம் நடத்திய விசாரணையில் அவர் அளித்த தகவலின்பேரில் நேற்று முன்தினம் சென்னை செங்குன்றம், வடகரையில் பதுக்கி வைத்திருந்த 15.900 கிலோ கிராம் போதைப் பொருளை மாதவரம் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

 கைது செய்யப்பட்ட வெங்கடேசன் பஞ்சாப் மாநிலம், பட்டியலா மாவட்டத்தில் போதை பொருள் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, 7 ஆண்டுகள் தண்டனையை அனுபவித்து 2021-ம் ஆண்டு விடுதலையானார்.

  பின்னர் உறவினரான கொடுங்கையூரைச் சேர்ந்த பிரபு மற்றும் ஊரப்பாக்கம் சண்முகம் ஆகியோருடன் இணைந்து ஹரியானா மற்றும் மியான்மரில் இருந்து மணிப்பூர் வழியாக சென்னைக்கு போதைப் பொருள் மற்றும் அதனை தயாரிக்கும் மூலப்பொருளை கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

   இவ்வழக்கில் தொடர்புடைய புரசைவாக்கம் சாகுல் ஹமீத் மற்றும் லாரன்ஸ் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்கள் போதை பொருட்களை விற்பனை செய்து அதன்மூலம் கிடைத்த லாபத்தில் வாங்கப்பட்ட 2 வீட்டு சொத்துக்களின் ஆவணங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

  வெங்கடேசனுக்கு கூட்டாளியாக இருந்த அவரது மனைவி ஜான்சி மெரிடா மற்றும் மாதவரம் சரத்குமார், விழுப்புரம் லட்சுமி நரசிம்மன், அருப்புக்கோட்டை முருகன் ஆகிய 6 பேரை போலீஸார் அடுத்தடுத்து கைது செய்தனர்.

  அவர்களிடமிருந்து மொத்தம் 17.815 கிலோ கிராம் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

  இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.17 கோடி என போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள்.