உழவர் சந்தை அருகிலேயே மார்க்கெட்டா? கோபம்- விடிய விடிய மறியல்!

ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி உழவர் சந்தை விவசாயிகள் மற்றும் வெளி வியாபாரிகள் இரு தரப்பும் அதிகாலை 3 மணி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தால் வாடிக்கையாளர்கள் அவதி
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் வார சந்தை மைதானத்தில் மிகவும் அருகருகே உழவர்சந்தை மற்றும் வெளி வியாபாரிகள் கடைகளும் இயங்கி வருகிறது.
உழவர் சந்தையில் சுமார் 200 க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் நிலங்களில் விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகள் கீரைகள் ஆகியவற்றை உழவர் சந்தைக்கு நேரடியாக கொண்டு வந்து அதிகாலை 3 மணி முதல் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உழவர் சந்தைக்கு செல்ல இரு வழிகள் அமைக்கபட்டுள்ளது. இதில் ஒரு வழியில் வெளி வியாபாரிகள் சுமார் 100 க்கும் மேற்பட்ட கடைகளை அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளி வியாபாரிகளின் கடைகளால் உழவர் சந்தைக்கு செல்ல மிகவும் சிரமமாக உள்ளதாக கூறி ஒரு வழியை மூடி விட்டு ஒரு வழியை மட்டும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறி விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் உழவர் சந்தை வெளியில் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வியாபாரிகள் ஒரு வழியை அடைதால் தங்கள் விற்பனை முற்றிலும் பாதிக்கப்படும் என்றும்,இரண்டு வழிகளையும் பயன்படுத்த அனுமதி வழங்கினால் அனைவரும் வியாபாரம் செய்ய ஏதுவாக இருக்கும் என்று கூறி இரு வழிகளையும் திறந்து விட வேண்டும் என்று கூறி வியாபாரத்தை புறக்கணித்து அவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரு தரப்பு வியாபாரிகளும் விற்பனையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் காய் கறி உள்ளிட்டவைகளை வாங்க வந்த வாடிக்கையாளர்கள் செய்வதறியாது தவித்தனர்.
தகவல் அறிந்து வந்த உழவர் சந்தை அதிகாரிகள் மற்றும் வாணியம்பாடி டி.எஸ்.பி சுரேஷ் பாண்டியன் தலைமையிலான போலிசார் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி காலை 10 மணிக்கு வட்டாட்சியர் தலைமையில் கூட்டம் நடத்தி உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததன் பேரில் விவசாயிகள் மற்றும் வெளி வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.