காகித கப்பல் விட்டு வக்கில்கள் போராட்டம்!

கு.அசோக்,
வாணியம்பாடியில் நீதிமன்ற வளாகத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து தண்ணீரில் காகித கப்பலை விட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ,வாணியம்பாடி கச்சேரி சாலை பகுதியில் உள்ள அரசினர் தோட்ட வளாகத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் , வட்டாட்சியர் அலுவலகங்கள் வணிக வரி அலுவலகம் காவல்துறை கட்டிடம் உள்ளிட்ட ஏனைய அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அலுவலகங்களுக்கு செல்லும் முகப்பிலிருந்து மழைநீர் நீதிமன்ற வளாகத்தை சுற்றிலும் தேங்கி நிற்கிறது.
இதனால் நீதிமன்றத்திற்கு செல்லவும், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லவும் பொதுமக்கள் தேங்கியிருக்கும் தண்ணீரில் கடந்து செல்ல வேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது.
ஆகவே மழைநீரை அகற்ற கோரி பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் நகராட்சி நிர்வாகத்திற்கும் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் காலை ஒருமணிநேரம் நீதிமன்றத்தை புறக்கணித்து மழைநீரை அகற்ற கோரி வழக்கறிஞர்கள் தேங்கி இருக்கும் மழை நீரில் காகிதத்தில் கப்பலை விட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு அரசு ஒருங்கிணைந்த வளாகங்கள் செயல்படும் அரசினர் தோட்டத்திற்கு செல்லும் வழியில் தேங்கி இருக்கும் மழை நீரை வடிகால் அமைத்து நீண்ட நாள் பிரச்சனையை தீர்க்க முன்வர வேண்டுமென பொதுமக்களும் வழக்கறிஞர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.