50 நாட்களாக பற்றி எரியும் மணிப்பூர் - கண்டுகொள்ளாத பிரதமர் என காங்கிரஸ் குற்றச்சாட்டு! பேனர் மூலம் வேண்டுகோள்!!

ஜார்ஜ்.ரவி,
50 நாட்களாக பற்றி எரியும் மணிப்பூர் சம்பவத்தை பிரதமர் கண்டு கொள்ளவில்லை என்று காங்கிரஸ் கட்சி கடும் தாக்குதல் விடுத்திருக்கிறது.
ஜெய்ராம் ரமேஷ்
இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில், மணிப்பூரில் "அதிகபட்ச கண்டுகொள்ளாமை, குறைந்தபட்ச ஆட்சி" என பா.ஜ.க. செயல்படுகிறது. பிரதமரின் அமெரிக்கப் பயணம் குறித்த அனைத்து செய்திகளுக்கும் மத்தியில், மணிப்பூரின் வலி 50வது நாளாக தொடர்கிறது என்பதை நினைவூட்டுகிறோம்.
எத்தனையோ விஷயங்களில் பாடம் எடுக்கும் அவர், துரதிர்ஷ்டவசமாக, மணிப்பூர் சோகத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவரை சந்திக்க நேரம் கேட்ட அரசியல் பிரதிநிதிகளுக்கு அனுமதியில்லை. பிரதமர் கவலைப்படுகிறார் என்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.
நெருக்கடியான நேரத்தில் மணிப்பூரை புறக்கணிப்பதின் மூலம் பிரதமராக தனது கடமையிலிருந்து முற்றிலும் தவறிவிட்டார். அவரது நடத்தை அதிர்ச்சியளிக்கிறது என்று அவர் கூறி உள்ளார்.
சசி தரூர்
காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தலைவர் சசி தரூர் கூறுகையில், 'கடந்த 50 நாட்களில் வேறு எதற்கு ஒரு பெரிய முன்னுரிமை இருந்திருக்க முடியும்? வாக்குறுதியளிக்கப்பட்ட "அதிகபட்ச ஆட்சி" எங்கே? தொழில்நுட்பம் முதல் மின்-ஆளுமை வரை இணையத்தைப் பயன்படுத்துவதில் பெருமை கொள்ளும் அரசு, மணிப்பூரில் ஏன் இரண்டு மாதங்களுக்கு இணையத்தை முடக்கியது? இணையத்தை உடனுக்குடன் முடக்கும் இத்தகைய எதிர்வினைகள் நிறுத்தப்பட வேண்டும்.
உலகிலேயே நீண்ட காலத்திற்கு இணையத்தை முடக்கியதற்கான "உலக சாதனைக்கு" நாம் சொந்தம் கொண்டாடப் போகிறோம்' என தெரிவித்தார்.
நிங்கோம்பம் புபெண்டா மெய்தி
மணிப்பூர் காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் நிங்கோம்பம் புபெண்டா மெய்தி கூறியிருப்பதாவது: மணிப்பூரில் நிலவும் கொந்தளிப்பு எவ்வளவு காலம் நீடிக்கும்? - மாதங்களா அல்லது ஆண்டுகளா அல்லது ஆண்டுகளா? 50 நாட்களாக மௌனம் காக்கும் பிரதமரின் கருத்தைக் கேட்க அரசியலமைப்புச் சட்டப்படி உரிமை உள்ளது.
இணையத் தடையை பல முறை நீட்டித்ததால் மணிப்பூர் கிட்டத்தட்ட 2 மாதங்களாக "இருளில்" இருக்கிறது. பல தொழில் வல்லுநர்கள் இணையத் தடையால் ஏற்கனவே மாநிலத்தை விட்டு சென்று விட்டனர் என்று மெய்தி கூறியுள்ளார்.
குறிப்பு இன மோதல்களால் உருக்குலைந்திருக்கும் மணிப்பூரின் 10 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், டெல்லியில் முகாமிட்டு, ஜூன் 10 முதல் பிரதமரிடம் கருத்து கேட்க முயன்று வருகின்றனர் என்பதால் அவர்கள் பிரதமர் அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு நடையை கட்டியிருக்கிறார்கள்.
மேலும் பிரதமரை மையப்படுத்தி போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டு அங்கு நிலவரம் வேறு மாதிரி போய்க் கொண்டிருக்கிறது.