படுத்து உருண்டு மறியல் டிராபிக் ஜாம்!

ஜி.கே.சேகரன்,
காலகாலமாக பயன்படுத்தி வந்த பாதையில் பள்ளம் தோண்டியதால் ஊர் பொதுமக்கள் சாலை மறியல் நடத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த குருமன்குட்டை பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அப்பகுதி மக்கள் காலம்காலமாக மண்சாலை ஒன்றை பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் சந்திரகிரி வட்டம், நாரியூர், பாட்டக்காரன் வட்டம் , ஏழுமலை கொள்ளையான் வட்டம், உள்ளிட்ட பகுதி மக்களும் இந்த மண் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் அதே பகுதியைச் சேர்ந்த துரைசாமி மகன் மணி என்பவர் சாலையின் குறுக்கே கல்லை போட்டு தடை ஏற்படுத்தி உள்ளார்.
அதனால் ஆத்திரமடைந்த முத்து என்பவரின் மகன் மாது ,அந்த வழியாக யாரும் செல்லக்கூடாது என பள்ளம் தோண்டியதாக தெரிகிறது.
இதுகுறித்து பலமுறை அப்பகுதி மக்கள் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் வழியாக பெங்களூர் செல்லும் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தார்சாலையில் படுத்து மறியல் செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இதுகுறித்து முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் அனைவரும் கலந்து சென்றனர்.
இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.