ஆணவ கொலை பற்றி பேசிய கொ.ம.தே. கட்சி வேட்பாளர் அதிரடி மாற்றம்!
உ.சசிகுமார்,
நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி இடம் பிடித்திருக்கிறது. அவர்களுக்கு ஒரு சீட்டு கொடுத்து நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டது. அந்த வகையில் அக்கட்சியின் வேட்பாளராக சூர்யமூர்த்தி என்பவரை அறிவித்து அவர் தேர்தல் பணியை தொடங்கினார்.
இந்நிலையில், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் சூரிய மூர்த்தி திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு பதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் வி.எஸ். மாதேஸ்வரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆட்சி மன்றக்குழு
கூட்டத்தில் இதற்கான முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆணவ கொலை பேச்சு.
தற்போது நீக்கப்பட்டிருக்கும் வேட்பாளர் சூர்யமூர்த்தி பல ஆண்டுகளுக்கு முன்னர் விழா ஒன்றில் பங்கேற்று எங்கள் சாதி பெண்களை காதலித்து திருமணம் செய்ய நினைக்கும் மாற்று சாதி இளைஞர்களை கருவறுப்போம் என்றும், ஈரோடு சிறையில் 250 பேரை தயார செய்து வைத்திருக்கிறேன். நாங்கள் பத்து வீட்டுக்கு படி அளக்கிற சாதி, நீங்கள் பத்து வீட்டுல பிச்சை எடுத்து திண்கிற சாதி என்று தாழ்த்தப்பட்ட சமூகத்தை மையப்படுத்தி பேசியிருந்தார்.
மேலும், சட்டம் ஒழுங்கு கெடும், உளவுத்துறையே குறித்துக்கொள் என்றெல்லாம் வீர வசனம் பேசினார்.
அப்போது அவர் வெளிப்படையாக பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலானது. மேலும் அந்த வீடியோவில் ஆணவப் படுகொலை, ஆள் கடத்தல், கொலை மிரட்டல் என பல்வேறு சம்பவங்களை அவரே ஒப்புக் கொண்ட பதிவுகளும் அதில் இடம் பெற்றுள்ளன.
சூர்யமூர்த்திக்கு நானக்கல்லில் போட்டியிட வாய்ப்பு கொடுத்த நிலையில், இவரையா நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்போகிறீர்கள் என்று பொங்கிய சிலர் அந்த பழைய வீடியோவை பரவிட்டு சீட்டுக்கு வேட்டு வைத்திருக்கிறார்கள்.
நியாயப்படி பார்த்தால் சூர்யமூர்த்தி மீது வழக்கு கூட பதியலாமே?