இது தாங்க ஸ்மார்ட் சிட்டி!சொந்த செலவில் கழிவுநீர் கால்வாய் அமைத்துவரும் பொதுமக்கள்!

உமர்,
வேலூர் மாநகராட்சி நிர்வாகம் பல வார்டுகளை கைவிட்ட நிலையில் சொந்த பணத்தை செலவழித்து பொதுமக்களே கழிவுநீர் பாதை ஏற்படுத்தியுள்ளனர்
வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு சிறப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வேலூர் மாநகராட்சியின் 2வது மண்டலத்திற்கு உட்பட்ட 17வது வார்டு அசரத் மக்கான் சிக்னல் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
ஆனால் இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் என்பது பல ஆண்டுகளாகவே தூர்வாரப்படாததால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அப்படியே தேங்கி தெருக்களில் வழிந்தோடி சுகாதாரக் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
மழைக்காலங்களில் இந்த பகுதியில் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து கால்வாய்கள் மூலம் வெளியேற வழியில்லாததால் மழை நீர் தேங்கி அந்த பகுதி சுற்று வட்டார மக்களுக்கு பல்வேறு நோய்த் தொற்றுக்களை ஏற்படுத்தி வருவதுடன் பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தி உள்ளது.
எனவே இதனைக் கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் தங்களது கோரிக்கையை முன் வைத்து சீரமைக்க வேண்டினர்.
ஆனால் அந்த கோரிக்கையை மாநகராட்சி கைவிட்ட நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து சொந்த செலவில் கழிவுநீர் வசதி ஏற்படுத்தும் பணிகளை தொடங்கியுள்ளனர்.
இந்த தகவல் மாநகராட்சியின் காதுகளுக்கு எட்டியும் கூட சம்மந்தப்பட்டவர்கள் அந்தபகுதியை எட்டிப் பார்க்கவில்லையாம்.