இராணிப்பேட்டை - திருவாரூர் ஆசிரியர்கள் போராட்டம்!

கு.அசோக், க.பாலகுரு,
இராணிப்பேட்டை - திருவாரூர் முதன்மை கல்வி அலுவலக முன்பு அரசாணை 243ஐ கைவிட வலியுறுத்தி டிட்டோஜாக் அமைப்பு சார்பில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம்,
தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு 60 ஆண்டுகளாக இருந்து வந்த ஒன்றிய அளவிலான முன்னுரிமையை மாற்றி புதிய அரசாணை 243 வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையால் ஒன்றிய அளவிலான முன்னுரிமை என்பதை மாற்றி, மாநில அளவிலான முன்னுரிமை என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆசிரியர்களின் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வுகள் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக பெண் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காமல் போய்விடும்.
எனவே அரசாணை எண் 243 ஐ ரத்து செய்ய வேண்டும். அரசாணை 243 இன் படி நடைபெறும் ஆசிரியர்கள் கலந்தாய்வு பொது மாறுதலை ரத்து செய்ய வேண்டும். மூன்று அமைச்சர்கள் கொண்ட குழுவுடன் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் போது ஏற்றுக்கொண்ட 12 அம்ச கோரிக்கைகளான எமிஸ் வலைதள பதிவில் இருந்து ஆசிரியர்களை முற்றிலும் விடுவிக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அல்லாத பல்வேறு பிற பணிகளை வழங்குவதை கைவிட வேண்டும். மாணவர்களின் கல்விநலன் கருதி அவர்களுக்கான கற்பித்தல் பணிகளை மட்டுமே ஆசிரியர்கள் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டிட்டோஜாக் சார்பில் திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகவடிவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களான ஈவேரா, பாலமுருகன், காசிராஜா, பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் டிட்டோஜாக் உயர்மட்ட குழு உறுப்பினர் ரவி மற்றும் முரளி, முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை விளக்க உரையாற்றினார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த மறியல் போராட்டத்தில் ஏராளமான ஆசிரியர், ஆசிரியைகள் விடுப்பு எடுத்து கலந்து கொண்டனர்.
இராணிப்பேட்டை மாவட்டம்,
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் பொது பணியிட மாறுதலை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும மேற்பட்ட ஆசிரியர்களை ராணிப்பேட்டை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.