செம டெல்லாக இருந்த அதிமுகவை "குஷி மோடுக்கு" மாற்றியதா பாமக? கூட்டணி பற்றி இன்று அறிவிப்பா?!!

ம.பா.கெஜராஜ்,
நீண்ட இழுபறிக்குப் பின்னர் அதிமுக - பாமக கூட்டணி பற்றின திரை மறைவு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து இன்று அதிகாரபூர்வ பேச்சுவார்த்தையும், அதன் பின்னர் ஒப்பந்தமும் கையெழுத்தாகும் என்கிற நிலையில், இது தொடர்பான அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை செம டெல்லாக இருந்த அதிமுக இப்போது குஷி மோடுக்கு சென்று இருக்கிறார்களாம்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு பாமக எம்எல்ஏ அருள்சென்றார். அப்போது அவர் கூட்டணி தொடர்பாகத் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை செய்தார்.
சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அதிமுக கூட்டணியில் பாமக இணைவதை உறுதி செய்துள்ளது. பாமக விரும்பும் 7 மக்களவைத் தொகுதிகள், 1 மாநிலங்களவை சீட் வழங்க அதிமுக சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆகவே, பேச்சுவார்த்தையில் இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக பாமக தலைவர் அன்புமணி மற்றும் ஜி.கே.மணி ஆகியோர் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்தனர்.
பாமகவைப் பொறுத்தவரை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அதிமுக உடன் கூட்டணி வைக்கவே தொடக்கம் முதல் விரும்பினார். இதன் காரணமாகவே அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் 2 முறை ராமதாஸை சந்தித்துப் பேசியிருந்தார்.
அப்போதே இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உறுதியாகும் எனக் கூறப்பட்டது.
இருப்பினும், ராமதாஸின் மகனும் அக்கட்சியின் தலைவருமான அன்புமணி, பாஜகவுடன் கூட்டணி வைக்க முயற்சி எடுத்துள்ளார்.
இதற்காக அவர் டெல்லி வரை சென்று பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் தான் அன்புமணி மற்றும் ஜி.கே.மணி ஆகியோர் ராமதாஸை சந்தித்தனர்.
அதைத் தொடர்ந்து தான் எடப்பாடி பழனிசாமியை பாமக எம்எல்ஏ அருள் சந்தித்துள்ளார்.
இதன் மூலம் அதிமுக பாமக கூட்டணி இறுதி வடிவத்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக - பாமக கூட்டணி உறுதி செய்யப்பட உள்ள நிலையில் இன்று காலை பாமக அவசர ஆலோசனைக் கூட்டம் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.