மருத்துவ கழிவை கொளுத்தும் அரசு ஊழியர்கள்!

கு.அசோக்,
நெமிலி அடுத்த ஆட்டுப்பாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டி எரிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த ஆட்டுப்பாக்கத்தில் 24 மணி நேர ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.
இங்கு ஆட்டுப்பாக்கம், கீழ்வெங்கடாபுரம், சயனபுரம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
மேலும், வாரம்தோறும் செவ்வாய்க் கிழமை கர்ப்பிணிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்நிலையில் இங்கு பயன்படுத்தப்பட்ட மருத்துவகழிவுகள், ஊசிகள்,மருந்து பாட்டில்கள்,காலாவதியான மருந்து பாட்டில்கள், இன்சுலின் ஆகியவை தினமும் மருத்துவமனை வளாகத்தில் கொட்டி எரிக்கப்படுகிறது.
இதனால் அதில் இருந்து அதிகளவு புகை வெளியேறி, அப்பகுதி மக்கள் மட்டுமின்றி அருகே உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவ,மாணவிகள் பெரிதளவு பாதிக்கப்படுகின்றனர்.
இந்த மருத்துவ கழிவு கலந்த புகை வெளியேற்றத்தால் நுரையீரல் பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் மற்றும் சுற்றுப்புறசூழல் நலன் கருதி ஆட்டுப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ கழிவுகள் எரிப்பதை மாவட்ட மருத்துவ அதிகாரிகள் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.