"உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" திட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண்க! திருப்பத்தூர் ஆட்சியர் உத்தரவு!

ஆர்.ரமேஷ்,
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வரபெற்ற மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்,இ.ஆ.ப., அவர்கள் பொது மக்களிடமிருந்தும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.
இக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முதன்மை திட்டமான உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வரபெற்ற மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என அனைத்து துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்;.
மேலும் வருவாய் துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, வனத்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என மொத்தம் 491 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
பின்னர் இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 19 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.86 இலட்சம் மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டர்கள், 18 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.89 இலட்சம் மதிப்பிலான நலவாரியம் ஈமச்சடங்கு உதவித்தொகை, 10 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பயணம் செய்ய பேருந்து பயணச் சலுகை அட்டைகள் என மொத்தம் 47 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.21 இலட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஜெ.நாராயணன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திரு.ஃபெலிக்ஸ் ராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(நிலம்) திரு.ராஜராஜன், அனைத்து துறை அலுவலர்கள்; மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர்.