கோவை:- 261 பெண் காவலர்களுக்கு இலகுரக வண்டி ஓட்ட ஆசை!

J.Arun Hendrics,
கோவை மாநகரில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு காவல் வாகனங்களை ஓட்டுவதற்கான ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பெண்கள் காவல்துறையில் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு பெண் காவலர்கள் காவல் வாகனங்கள் ஓட்டுவதை ஊக்குவிக்கும் விதமாக கோவை மாநகர காவல் துறையின் சார்பில் கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் ஓட்டுநர் பயிற்சி அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
ஆண் காவலர்கள் மட்டுமே செய்ய முடியும் என்ற பணிகளை, பெண் காவலர்களாலும் செய்ய முடியும் என்ற அடிப்படையில் ஓட்டுனர் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து பெண் காவலர்களுக்கு கார் ஓட்டும் பயிற்சி மாநகர காவல் துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பயிற்சி வழங்கும் நிகழ்வை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். முதல் கட்டமாக 30 பெண் காவலர்களுக்கு கார் ஓட்டும் பயிற்சி துவங்கப்பட்டுள்ளது. நான்கு பெண் காவலர்கள் கனரக வாகனம் ஓட்ட மாநகர காவல் துறையிடம் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த நிகழ்வை தொடங்கி வைத்த மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் இ.கா.ப. அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
261 பேர் இலகு ரக வாகன பயிற்சிக்கு பெண் காவலர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில் முதற்கட்டமாக இன்று 30 பேருக்கு பயிற்சி துவங்கப்பட்டுள்ளது. இந்த 261 பேரில் அடுத்த கட்டமாக யார் யாருக்கு கனரக வாகன பயிற்சி தேவையோ அவர்களுக்கும் அடுத்த கட்ட பயிற்சி வழங்கப்படும்.
கனரக வாகனங்களுக்கு ஆண் காவலர்களுக்கு மட்டுமே பயிற்சி வழங்கப்படும் நிலையில், பெண் காவலர்களுக்கும் வழங்கப்படுகிறது.
கோவை மாநகர காவல் துறையில் உள்ள அனைத்து பெண் காவலர்களுக்கும் ஓட்டுனர் பயிற்சி வழங்குவதுடன் உரிமமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல முதற்கட்டமாக 4 பேர் கனரக வாகனங்கள் ஓட்ட விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றார்.