பிரபல யூடியூபர் மீது வழக்கு! மக்களவை சபாநயகர் மகள் படிப்பு பற்றி தவறான பதிவு! மன்னிப்பு கோரியதுடன் டெலிட் செய்தார்!

ம.பா.கெஜராஜ்,
மக்களவை சபாநயகர் மகளைப்பற்றிய தவறான பதிவால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து, பிரபல யூடியூபர் மீது மும்பை சைபர் கிரைம் போலிசார் வழக்கு பதிந்தனர். தற்போது அவர் மன்னிப்பு கோரியதுடன் பதிவுகளை டெலிட் செய்துள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது யூ டியூப் சேனல் வாயிலாக பெரிய பங்காற்றியவர் துருவ் ராட்டி. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பாஜகவை மையப்படுத்தி பல தகவல்களை வெளியிட்டு வந்தார்.
அவரது யூ டியூப் சேனல்களில் சுமார் 3 கோடி பின் தொடர்வாளர்கள் இருக்கிறார்கள். ஹரியானாவை பூர்விகமாகக் கொண்டவர் அவர் தற்போது ஜெர்மனியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் யூடியூபர் துருவ் ராட்டி மக்களவைத் தலைவர் ௐம் பிர்லாவின் மகள் அஞ்சலி குறித்து அவதூறான கருத்துகளை பரப்பியது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் அவர் சர்ச்சைக்குரிய அந்த பதிவுகளை டெலிட் செய்ததுடன் மன்னிப்பும் கோரியிருக்கிறார்.
மக்களவைத் தலைவர் ௐம் பிர்லாவுக்கு இரு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் அகன்ஷா பிர்லா, பட்டய கணக்காளராக (சிஏ) பணியாற்றி வருகிறார். இளைய மகள் அஞ்சலி பிர்லா மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.
அப்படியிருக்க, கடந்த 2019-ம் ஆண்டில் அவர் குடிமைத் பணித் தேர்வை எழுதினார். கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டில் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் அஞ்சலி பிர்லா தேர்ச்சி பெற்று அவர் ரயில்வே துறையில் பணியாற்றி வருகிறார்.
முதல் முயற்சியிலேயே குடிமைப் பணித் தேர்வில் அவர் தேர்ச்சி பெற்றது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இது தொடர்பாக கடந்த மக்களவைத் தேர்தலின்போது சர்ச்சை பேச்சுக்கள் எழுந்தன.
அதைத் தொடர்ந்து யூடியூபர் துருவ் ராட்டி தனது சமூக வலைதள பக்கங்களில், அஞ்சலி பிர்லா குறித்த குடிமைப் பணி தேர்வை பற்றி விமர்சித்து பகிர்ந்திருந்தார். இதுதொடர்பாக "ௐம் பிர்லாவின் உறவினர் ஒருவர் அளித்த புகாரின்பேரில் யூடியூபர் துருவ் ராட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் துருவ் ராட்டி இது தொடர்பாக பதில் அளித்திருக்கிறார்.
அதில் "மும்பை சைபர்கிரைம் போலீஸாரின் அறிவுறுத்தலின்படி அஞ்சலி பிர்லா தொடர்பான அனைத்து பதிவுகளையும் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கிவிட்டேன். அந்த பதிவுகள் எனது சொந்த கருத்துகள் கிடையாது. பிறருடைய பதிவுகளை நான் எனது சமூக வலைதள பக்கத்தில் பகிர மட்டுமே செய்தேன். இதற்காக மன்னிப்பு கோருகிறேன்'' என்று தெரிவித்தார்.
இதனால் இந்த பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டிருப்பதாகவே பார்க்கப்படுகிறது.