டெல்லிக்கு போகாமல் இந்தியா முழுவதும் பிரபலமான பெருமை தளபதிக்கு மட்டுமே உண்டு!துரைமுருகன்!!

ம.பா.கெஜராஜ்,
டெல்லிக்கு போகாமல் இங்கு உட்கார்ந்து கொண்டே இந்தியா முழுவதும் பிரபலமான பெருமை தளபதிக்கு மட்டுமே உண்டு என்று திமுகவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பேசினார்.
தி.மு.க.,வின் 15வது உட்கட்சித் தேர்தல் நடந்து முடிந்த பின்னர், அக்கட்சியின் தலைவர், பொதுச்செயலர், பொருளாளர் உள்ளிட்ட பதவிக்கு தேர்தல் நடந்தது. தி.மு.க., தலைவர் பதவிக்கு, மீண்டும் ஸ்டாலின் போட்டியிட்டார். இதற்காக இருநாட்களுக்கு முன்னதாக அறிவாலயத்தில் அவர் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரை தொடர்ந்து, பொதுச்செயலர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும், வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து சென்னை அமைந்தகரை செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் உள்ள 'விங்க்ஸ் கன்வென்ஷன்' மையத்தில், இன்று கூடிய திமுக பொதுக்குழுவில், இரண்டாவது முறையாக, தி.மு.க., தலைவராக ஸ்டாலின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த தேர்தலில் வேட்புமனுதாக்கல் செய்த அனைவரும் ஒருமனதாக தேர்வானார்கள்.
மேலும் ஏற்கனவே துணைப்பொதுச்செயலாளராக இருந்த இ.பெரியசாமி, அ.ராசா, அந்தியூர் செல்வராஜ் மற்றும் பொன்முடி ஆகியோர் அப்படியே பழைய பதவியை தொஇடர்ந்தனர். இந்த பதவியிலிருந்து சுப்புலஸ்சுமி ஜெகதீசன் விலகியதைத்தொடர்ந்து காலியாக இருந்த இடம் கனிமொழியைக் கொண்டு நிரப்பப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பலர் பேசினர்.
துரைமுருகன் பேசியதாவது:- தி.மு.க.வில் அண்ணா, நெடுஞ்செழியன், அன்பழகன் ஆகியோர் பொதுச் செயலாளராக இருந்துள்ளனர். என்னை 4-வது பொதுச்செயலாளராக உட்கார வைத்திருக்கிற தளபதியே உங்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றி தெரிவிப்பேன். அண்ணாவுக்கு பிறகு கலைஞர் இந்திய துணை கண்டத்தையே ஆட்டிப்படைக்கின்ற தலைவராக இருந்தார்.
கலைஞர் நினைத்தவர் தான் ஜனாதிபதியாக வர முடிந்தது. அவர் நினைத்தவர் தான் பிரதமராக வர முடிந்தது. கலைஞர் கூட முதமைச்சரான பிறகு டெல்லிக்கு போய் அவர் அரசியல் சாணக்கிய தனத்தை காட்டிய பிறகு தான் அவர் அங்கு பிரபலமானார். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லிக்கு போகாமல் இங்கு உட்கார்ந்து கொண்டே இந்தியா முழுவதும் பிரபலமான பெருமை தளபதிக்கு மட்டுமே உண்டு.
அவர் இன்னும் அரசியலில் சாணக்கிய தன்மையோடு விளங்கி மாபெரும் வெற்றியை தமிழ்நாட்டுக்கு தருவார்.
இந்த கழகம் மேலும் மேலும் வளருவதற்கு உறுதுணையாக இருப்பார். அவருக்கு உறுதுணையாக ஆலோசனை சொல்ல அவரோடு இருந்து பணியாற்ற எனக்கு இந்த வாய்ப்பை அளித்த தளபதிக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று பேசினார்.
அவரைத் தொடர்ந்து பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி. பேசியதாவது:- அன்புத்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினை 2-வது முறையாக தி.மு.க. தலைவராக பொதுக்குழு தேர்ந்தெடுத்து நம்மை ஆள்வதற்கு நம் இனத்தை ஆள்வதற்கு ஒப்புதல் தந்துள்ளது. பொதுக்குழுவில் உள்ள அத்தனை பேரும் ஒன்றாகவே சிந்தித்து இவர்தான் தலைவர், இவர்தான் பொதுச்செயலாளர், இவர் தான் பொருளாளர் என்று ஒரே மாதிரியாக முடிவு எடுத்து உள்ளனர்.
இந்த இயக்கத்தை ஒற்றுமையாக கொண்டு செல்ல நம் தலைவர்தான் தகுதியானவர். இங்கே தம்பி உதயநிதி பேசும்போது எல்லாமே அப்பாதான் என கூறிவிட்டு சென்றார்.
உங்களுக்காக மூத்தவர்கள் எங்களை போன்றோர் உதவி செய்ய காத்திருக்கிறோம். எதிர்காலத்தில் இளைஞரணிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வருங்காலம் உங்கள் கையில் இருக்கிறது என்றார்.
பொதுக்குழுவில் கே.என்.நேரு பேசியதாவது:- நீங்கள் கழக தோழர்கள் யாரையும் மறவாமல் நினைவில் கொண்டு எந்தெந்த நேரத்தில் யாருக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை மறக்காமல் செய்கின்ற மாபெரும் தலைவராக கலைஞருக்கு பிறகு நீங்கள் திகழ்கிறீர்கள்.
நாங்கள் பல இடங்களில் பார்த்து இருக்கிறோம். கழகத்தில் ஒவ்வொருவரின் உணர்வையும் புரிந்து கொண்டு இருக்கின்ற தலைவர் நீங்கள். நாங்கள் கலைஞருடன் நீண்டகாலம் பயணித்து இருக்கிறோம். உங்களோடும் நீண்டகாலம் பயணித்து இருக்கிறோம். தலைவர் என்ன நினைப்பார் என்று நாங்கள் முகத்திலேயே தெரிந்து கொள்வோம்.
தலைவருக்கு பிறகு அவரை விஞ்சிய தலைவராக அனைவரையும் அரவணைக்கும் தலைவராக அனைவரிடமும் வாஞ்சையோடு பழகுகிற தலைவராக நீங்கள் கிடைத்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்லும் பணியை முதன்மை பணியாக தட்டாமல் செய்யும் வகையில் நாங்கள் இருப்போம் என்றார்.
தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். தற்போது 2-வது முறையாக அவர் இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும்போது முதல்-அமைச்சராக உள்ளார். அதாவது முதல்-அமைச்சராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தி.மு.க. தலைவராவது முதல்முறை ஆகும். 11-வது முறையாக தி.மு.க. தலைவராக கருணாநிதி இருந்தபோது, அவர் உடல் நலம் இல்லாமல் இருந்தார். அப்போது கட்சியின் செயல் தலைவர் பதவியையும் மு.க.ஸ்டாலின் வகித்தார் என்பது நினைவுகூறத்தக்கதாகும்.