போலி பெண் மருத்துவரை மடக்கி பிடித்த நிஜ மருத்துவர்கள்!

போலி பெண் மருத்துவரை மடக்கி பிடித்த நிஜ மருத்துவர்கள்!

ஜி.கே.சேகரன்,

 மருத்துவம்  படிக்காத பெண் ஊரை ஏமாற்றி வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

திருப்பத்தூர் மாவட்டம், குண்டு ரெட்டியார் அருகே மரிமாணிகுப்பம் கிராமத்தில், மருத்துவம் படிக்காமலேயே ஒருவர் அலோபதி முறையில் நீண்ட காலமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.

 இது குறித்து மருத்துவ துறையினருக்கு புகார்கள் பறந்தன. அதன் பேரில் திருப்பத்தூர் அரசு  மருத்துவமனை மருத்துவர் செல்வநாதன் தலைமையில் மருத்துவ குழுவினர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

 அப்போது அதே பகுதியை சேர்ந்த குப்பன் மனைவி கோகிலா (வயது 52).என்பவர், மருத்துவம் படிக்காமலேயே தனது வீட்டின் ஓர் அறையில் கிளினிக் வைத்து நோயாளிகளுக்கு அலோபதி முறையில் சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது.

   திடீரென அங்கு சென்ற  மருத்துவர் குழுவை கண்டவுடன்  அங்கு இருந்து தப்பி ஓட முயன்ற போலி டாக்டர் கோகிலாவை மருத்துவ குழுவினர் பிடித்து குரிசிலாப்பட்டு போலீசில் ஒப்படைத்தனர்.

 மேலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வைத்திருந்த மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்து கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர். இதுகுறித்து மருத்துவர் செல்வநாதன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகிலாவை கைது செய்தனர்.