அதிமுக பெண் கவுன்சிலருக்கு கொலை மிரட்டல்! போலீசில் புகார்! பதற்றம்!

அதிமுக பெண் கவுன்சிலருக்கு கொலை மிரட்டல்! போலீசில் புகார்! பதற்றம்!

ஜெ.எஸ்.

பெண் கவுன்சிலர் ஒருவருக்கு சக கவுன்சிலர் கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம் உதயேந்திரம் பேரூராட்சி கவுன்சிலராக இருப்பவர் சுகன்யா. இவர் அதிமுக வைச் சேர்ந்தவர் ஆவார்.

 இந்நிலையில் அவர் அதே பேரூராட்சியில் கவுன்சிலராக உள்ள திமுகவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் மீது  காவல் துறையில் புகார் அளித்திருக்கிறார்.  

 அந்த புகாரில் அவர் தெரிவித்திருப்பதாவது, நான் உதயேந்திரம் பேரூராட்சியில் 15-வது வார்டு கவுன்சிலராக இருந்து சேவை செய்து வருகிறேன். என் வார்டில் தலைவர் பூசா ராணி அவர்கள் இதுவரை எந்த பணியையும் செய்து தரவில்லை.

 ஆகவே  கடந்த 19-ம் தேதி உதயேந்திரம் பேரூராட்சி தலையரை சந்தித்து இது குறித்து கேட்டப்பொழுது, அதே பேரூராட்சியில் 9-வது வார்டு கவுன்சிலராக உள்ள அவரது மகன் செல்வராஜ் குறுக்கிட்டு உன் வார்டுக்கு எல்லாம் எந்த வேலையும் செய்ய முடியாது.

 நீ அதிமுகவைச் சேர்ந்தவர்,  நான் ஆளும் கட்சி நான் நினைத்தப்படி தான் செய்வேன். உன் வார்டுக்கு வேலை எதுவும் ஒதுக்க முடியாது, நீ எங்கு சென்று புகார் கொடு நான் பார்த்துக்கொள்கிறேன்  எஸ்.பி. டிஎஸ்பி ஆய்வாளர் ஆகியோர்கள் நான் சொல்வதை தான் செய்வார்கள்.

 மீறி ஏதாவது செய்தால் உன்னை உயிரோடு விடமாட்டேன் கொலை செய்து விடுவதாக சொல்லி பெண் என்றும் பாராமல் என்னை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

 அதை நான் என் கணவரிடம் சொன்னேன். அதை கேட்க போன என் கணவர் தினேஷையும் கவுன்சிலர் செல்வராஜ் என்பவர் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

 நாங்கள் கேட்பது தலைவரிடம் மட்டுமே தலைவரை மீறி அனைவருக்கும் இவர் தான் பதில் சொல்லி வருகிறார். எனவே, தாங்கள் மேற்படி செல்வராஜ் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என அந்த புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.

 இந்நிலையில் மேட்டுப்பாளையம் இந்து ஆதிதிராவிடர் கிராம பஞ்சாயத்தைச் சேர்ந்த மக்கள் குழுவாக சென்று எஸ்.பி.யிடமும், ஆட்சியரிடமும் கவுன்சிலர் செல்வராஜ் மீது புகார் அளித்துவிட்டு திரும்பியிருக்கிறார்கள்.

 பரஸ்பரம் கவுன்சிலர் செல்வராஜிம் இவர்கள் மீது புகார் அளித்திருப்பதாக தெரிகிறது.

 அதை உறுதிப்படுத்திக் கொள்ளவும், மேலும் அவர் தரப்பு விளக்கத்தையும் அறிந்து செய்தியில் இணைக்க செல்வராஜியை தொடர்பு கொண்டோம். அவர் நமது அழைப்பை ஏற்காமல் துண்டித்தார். ஆகவே அவரது விளக்கம் கிடைக்கபெற்றால் பரிசீலித்து பிரசுரிக்கப்படும்.

  எது எப்படியிருந்தாலும் போலீசார் இருதரப்பையும் அழைத்து விசாரித்து பிரச்சனையை வளராமல் துரிதமாக தீர்த்து வைக்க வேண்டும்.  தலைவரும் கட்சி பாரபட்சம் பாராமல் மக்கள் பணியை செய்திட  வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் அவா!

மேலும் வார்டில் செய்து முடிக்க வேண்டிய  மக்கள் பணிகளை குறித்து கேள்வி எழுப்பியது தப்பா என்று மக்கள் வினா எழுப்புகிறார்கள்.