கண்ணை மறைத்த கள்ளக்காதல்! குழந்தைகளை கடத்தியதாக பரபரப்பு!

கு.அசோக்,
கண்ணை மறைத்த கள்ளக்காதல் திடீர் பாசத்தால் குழந்தைகளை கடத்தி வந்ததாக பரபரப்பு 4 பேரை மீட்ட செங்கல்பட்டு போலீஸ்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருகே உள்ள ஒழலை கிராமத்தை சேர்ந்தவர் ஆர்த்தி( 38 ). இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். மருத்துவமனைக்கு பேருந்தில் வந்து செல்லும்போது தனியார் பேருந்து டிரைவரான கோகுல்ராஜ் (36) என்பவருடன் ஆர்த்திக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இவர்களது கள்ளக்காதல் ஆர்த்தியின் ஆட்டோ டிரைவர் கணவரான வேலனுக்கு (38) தெரியவந்தது.இதன் காரணமாக கடந்த 6 மாதத்துக்கு முன்பு கணவரை பிரிந்து ஆர்த்தி தனது கள்ளக்காதலன் கோகுல்ராஜுடன் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள பொன்னப்பந்தங்கல் கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினார்.
அதே நேரம் ஆர்த்தி தனது குழந்தைகளை தனது கணவர் வேலனிடம் விட்டுவிட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக பொன்னப்பந்தங்கல் கூட்ரோட்டில் ஆர்த்தி தனது கள்ளக்காதலன் கோகுல்ராஜ் உடன் வசித்து வந்தார்.
கடந்த 5 நாட்களுக்கு முன்பு அங்கு வீட்டை காலி செய்துவிட்டு நெமிலி அருகே புன்னை கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார்.திடீரென குழந்தைகள் மீது ஆர்த்திக்கு பாசம் வந்துள்ளது . இது குறித்து கள்ளக்காதலன் கோகுல்ராஜிடம் தகவல் தெரிவித்துள்ளார். கள்ளக்காதலியின் ஆசையை நிறைவேற்ற நேற்று திடீரென ஒரு காரில் ஆர்த்தி மற்றும் கோகுல்ராஜ் ஆகியோர் குழந்தைகள் படிக்கும் ஒழலை அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளிக்கு சென்றனர்.
பள்ளியில் இருந்து வெளியே வந்த குழந்தைகளை தாயான ஆர்த்தி அழைத்துள்ளார் . தாய் அழைத்ததும் பாசத்தோடு இரு குழந்தைகளும் ஓடி வந்துள்ளனர். அவர்களை காரில் அழைத்துக் கொண்டு கோகுல்ராஜுடன் ஆர்த்தி புன்னைக்கு வந்துள்ளார்.
¢இந்நிலையில் பள்ளி நேரம் முடிந்து நீண்ட நேரம் ஆகியும் குழந்தைகள் வீட்டுக்கு வராததால் தந்தை வேலன் பள்ளி மற்றும் அக்கம் பக்கத்தில் பல இடங்களில் தேடிப் பார்த்துவிட்டு செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் நெமிலி அடுத்த புன்னை கிராமத்தில் ஆர்த்தி மற்றும் குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் ஆர்த்தி, அவரது கள்ளக்காதலன் கோகுல்ராஜ், குழந்தைகளை செங்கல்பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் நெமிலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கணவரை பிரிந்து 6 மாதங்களாக கள்ளக்காதலனுடன் வசித்து வந்த ஆர்த்திக்கு திடீரென குழந்தைகள் மீது பாசம் ஏற்பட்டு கணவரிடம் சொல்லாமல் குழந்தைகளை தன்னுடன் அழைத்து வந்துள்ளார்.
பள்ளியிலிருந்து மாணவர்களை கடத்தி சென்று விட்டதாக செங்கல்பட்டில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.