ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டார்! கொலையாளி வாக்கு மூலம்!பிரதமர் இரங்கல்!

ஜி.சாந்தகுமார்,
ஜப்பான் நாட்டு முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டார், அவரது மறைவுக்கு இந்திய பிரதமர் மோதி உட்பட உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். ஏன் அவரை கொன்றேன் என்று கொலையாளி பரபரப்பாக சொல்லியிருக்கிறான்.
கிழக்கு ஆசிய நாடான ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, 67. இவர் 2012 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை அந்நாட்டின் பிரதமராக இருந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நிலை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அப்படியிருக்க இன்று, நாரா என்ற பகுதியில் ரயில் நிலையம் அருகே, முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் மறைந்திருந்து துப்பாக்கியால் ஒருவர் சுட்டதில், அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் ஷின்சோ அபே அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறப்பு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 41 வயது மதிக்கத்தக்க நபரை போலீசார் கைது செய்தனர். அந்த நபர், ஜப்பான் கடற்படையில் பணிபுரிந்தவர் எனவும், அவரது பெயர் டெட்சுயா யமகாமி எனவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, டெட்சுயா யமகாமி வீட்டில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அவரிடருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், "முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது திருப்தியில்லை. இதனால், அவரை கொலை செய்ய விரும்பினேன்" என போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
ஜப்பானில் பாராளுமன்ற மேல்-சபைக்கு வருகிற 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (வயது 67) தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். நேற்று இரவு நாரா நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.