புகைமண்டலமாக மாறிய சென்னை மாநகரம்! இனி பட்டாசு வெடிப்புக்கு தடை வருமா?

ஜி.சாந்தகுமார்,
சென்னையில் உள்ள அசோக் நகர் ஸ்ரீதேவி காலனியில் -147, கொடுங்கையூர் பகுதியில் - 150 ஆகவும், அதே பேல், மணலி, ஆலந்தூர் பேருந்து பணிமனை, வேளச்சேரி குடியிருப்பு பகுதி, பெருங்குடி ஆகிய நான்கு ஏரியாவில் அதிக காற்று மாசு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த இடங்களில் காற்றின் தரக்குறியீடு 100ஐ தாண்டியது.
தீபாவளி பண்டிகையன்று பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகளை சென்னை காவல் துறை அறிவுறுத்தியிருந்தது. தீபாவளி பண்டிகை தினமான நேற்று, உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும் என்று காவல் துறை அறிவுறுத்தியிருந்தது. மேலும், காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அறிவோம்.
இந்நிலையில் நேற்று காலை முதலே சென்னையில் காற்று மாசுபாடு அதிகரித்து காணப்பட்டது. அரசின் விதிப்படி, குறிப்பிட்ட நேரங்களில் அனைவரும் பட்டாசு வெடிக்கத் தொடங்கியதை அடுத்து சென்னையில் காற்று மாசு மேலும் அதிகரித்தது. சென்னையின் அனைத்து இடங்களிலும் காற்றின் தரக்குறியீடு 100ஐ தாண்டியது. குறிப்பாக, சென்னை அசோக் நகர் ஸ்ரீதேவி காலனியில் -147, கொடுங்கையூர் பகுதியில் - 150 என்ற அளவை தாண்டிச் சென்றது. சென்னையின் பல பகுதிகளிலும் இதே நிலைதான். எனினும், ராயபுரம், அண்ணா சாலை போன்ற ஒரு சில இடங்களில் மட்டும் 100க்கும் குறைவாக இருந்தது.
மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசுகள் வெடித்ததாக, இதுவரை 500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசு வெடித்தல், 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடித்தது, அனுமதி இல்லாத இடங்களில் பட்டாசுகள் வெடித்தது உள்ளிட்ட விதிமுறைகளை மீறியதாக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனை ஆகிய பணிகளின் போது விபத்து ஏற்பட்டு கும்பல் கும்பலாக மரணம் அடைகிறார்கள். அதே போல் பட்டாசு வெடிப்பதினால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் காற்றுமாசு அதிகமாக ஏற்படுகிறது. ஆகவே இனி வரும் காலங்களில் தமிழகத்தில் பட்டாசு தயாரிப்புக்கு தடை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.