ஓலா, ஊபர், ஸ்விகி, ஸொமட்டோ ஊழியர்களுக்காக தனி வாரியம்! காலை உணவு திட்டம் விரிவாக்கம்:-சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

ஓலா, ஊபர், ஸ்விகி, ஸொமட்டோ ஊழியர்களுக்காக தனி வாரியம்! காலை உணவு திட்டம் விரிவாக்கம்:-சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

 இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கோட்டையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக முப்படையினர் மற்றும் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 அப்போது பேசிய முதலமைச்சர், 'பெண்களுக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் இனி 'விடியல் பயணத் திட்டம்' என அழைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் காலை உணவு திட்டம் ஆக.25 முதல் விரிவாக்கமெனவும் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.

 "இந்தியாவின் முக்கியமான அங்கம் நம் தமிழ்நாடு. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு 3-வது ஆண்டாக தேசியக் கொடியை ஏற்றி வைப்பதில் பெருமிதம் கொள்கிறேன். சுதந்திரப் போராட்ட வீரர்களை போற்றுவதில் தி.மு.க. அரசு யாருக்கும் சளைத்தது அல்ல. மாநிலங்களுக்கு மாநிலம் உணவு, மொழி, பண்பாட்டில் மாறுபாடு உள்ளது. வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையுடன் வாழ்வதே நம் பலம். மதங்களின் பெயரால் மக்களிடையே உள்ள பிளவை களைய முயன்றவர் மகாத்மா காந்தி.     

 நாட்டின் வளர்ச்சி பெண்களிடம் இருந்தே தொடங்குகிறது என்பதை அறிந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். புதுமைப் பெண், கட்டணமில்லா பேருந்து சேவை என பெண்களுக்கான திட்டங்களை வகுத்துள்ளோம். பெண்களுக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் இனி 'விடியல் பயணத் திட்டம்' என்று அழைக்கப்படும்." இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

  காலை உணவு திட்டம் ஆக. 25 முதல் விரிவாக்கம்:

  வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் அனைத்து ஆரம்ப பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை போன்ற பெருநகரங்களில் தொடங்கி, பல்வேறு நகரங்களிலும் இன்று நாம் அடிக்கடி காணக்கூடிய காட்சி ஒன்று உள்ளது. ஓலா, ஊபர், ஸ்விகி, ஸொமட்டோ போன்ற நிறுவனங்களைச் சார்ந்த வாகனங்கள் விரைவாக சேவை வழங்கும் நோக்கத்துடன் பயணிப்பதைக் காணலாம்.

  நேரத்தின் அருமை கருதி பணிபுரியும் இத்தகைய பணியாளர்களின் வாழ்க்கை முக்கியமானது. அவர்களின் ஒட்டுமொத்த நலனைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கென தனியே நல வாரியம் ஒன்று அமைக்கப்படும் என்பதையும் இன்று அறிவிக்கிறேன் என்றார்.