பசங்க செய்த தவறுக்கு ஆசிரியர் மீது நடவடிக்கையா? பொங்கி எழுந்து கருப்பு பேட்ச் அணிந்து பாடம் நடத்தினர்!

பசங்க செய்த தவறுக்கு ஆசிரியர் மீது நடவடிக்கையா? பொங்கி எழுந்து கருப்பு பேட்ச் அணிந்து பாடம் நடத்தினர்!

 கு.அசோக்,

மாணவிகள்  ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட விவகாரத்தில் வகுப்பு ஆசிரியர் சாமுண்டீஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூர் மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட ஆசிரியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து பள்ளிக்கு சென்றனர்.

  வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் பகுதியில் இயங்கும் அரசு பெண்கள் பள்ளியில், 12-ம் வகுப்பு  மாணவிகள் சிலர் பள்ளி சீருடையில் வகுப்பறை மாடிக்குச் சென்றுவீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியிட்டிருந்தனர்.

   அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாக வைரலான நிலையில், பள்ளிகல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சென்று நேரடி விசாரணை நடத்தினர்.

  இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மாணவிகளின் வகுப்பு ஆசிரியர் சாமுண்டீஸ்வரியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உத்தரவிட்டிருந்தார்.

 மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூர் மாவட்ட ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கருப்பு பட்டை (பேட்ச்) அணிந்து பள்ளிக்கு சென்றனர்.

 ஆசிரியர் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆசிரியரின் பணியிட நீக்கத்தை ரத்து செய்யும் வரை பல்வேறு வகைகளில் மாவட்டத்தில் போராட்டம் தொடரும் என்றும் ஆசிரியர் சங்க கூட்டமைப்பு நேற்று தெரிவித்திருந்தது.

  அதனைத் தொடர்ந்து இன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அந்த வகையில், மாவட்டம் முழுவதும் 4-ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து பள்ளிகளுக்கு சென்று இருக்கிறார்கள்.

   கருப்பு பேட்ச் அணித்து பள்ளிக்கு சென்று மாணவர்களிடையே பாடம் எடுத்தது வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.