கண்கலங்க வைக்கும் போலிஸ் இன்ஸ்பெக்டர் அண்ட் டீம்!

 க.பாலகுரு,

   திருவாரூர் மாவட்ட ஆலங்குடி குருபகவான் கோவிலில் தங்க வந்த ஆதரவற்ற முதியவருக்கு சாப்பாட்டிற்கு  பணம் கொடுத்து அனுப்பி வைத்த காவல் ஆய்வாளர். வலங்கைமான் அருகே நடந்த நெகிழ்ச்சி சம்பவம் .

 திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் முருகன் வயது 70.இவர் மனைவியை பிரிந்து தனிமையில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆதரவற்ற நிலையில் வசித்து வந்த முதியவர் செய்தித்தாளில் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள குரு பகவான் ஆலயம் குறித்து படித்துள்ளார். அந்த ஆலயத்திலேயே சென்று தங்கிவிடலாம் என்கிற யோசனையில் அவர் திண்டுக்கலில் இருந்து பேருந்து மூலம் திருவாரூர் மாவட்டம் வலங்கைமானுக்கு வந்துள்ளார்.

 அதனைத் தொடர்ந்து எங்கு செல்வது என்று தெரியாத முருகன் வலங்கைமான் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு இருந்த காவல் ஆய்வாளர் ராஜாவிடம் தனது நிலையை எடுத்து கூறி தனது கடைசி ஆசையான ஆலங்குடி குரு பகவான் கோவிலில் தங்க வேண்டும் என்பதையும் தெரிவித்துள்ளார்.

 தாடியுடனும் அழுக்கு சட்டையுடனும் ஒரு யாசகர் போல காட்சியளித்த அவரின் பேச்சுக்கு செவிசாய்த்ததுடன் உரிய மரியாதை கொடுத்த காவல் ஆய்வாளர் ராஜா, உடன் போலிஸ் அலுவலர்களை வைத்துக்கொண்டு  முதியவருக்கு உணவு வாங்கிக் கொடுத்ததுடன் ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்து ஆலங்குடி செல்லும் பேருந்தில் அவரை ஏற்றி அனுப்பி வைத்துள்ளார்.

   மேலும் காவல் ஆய்வாளர் ராஜா அங்கு சென்று ஊராட்சி மன்ற தலைவர் மோகன் என்பவரிடமும் மற்றும் கோவில் நிர்வாகத்திடமும் அவரது நிலை குறித்து எடுத்துக் கூறி அங்கு தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்று கூறியும் அனுப்பி வைத்துள்ளார்.

 காவல் நிலையம் வந்த ஆதரவற்ற முதியவருக்கு தகுந்த யோசனை கூறி உணவளித்து பணம் கொடுத்து பத்திரமாக அனுப்பி வைத்த காவல் ஆய்வாளர் ராஜாவின் மனிதநேய செயலுக்காக அப்பகுதி மக்கள் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.