அதிமுக  பாஜக கூட்டு இன்று முக்கிய முடிவு வெளியாகலாம்!

அதிமுக  பாஜக கூட்டு இன்று முக்கிய முடிவு வெளியாகலாம்!

 ஜி.சாந்தகுமார்,

அதிமுக பாஜக கூட்டு குறித்த முக்கிய முடிவு இன்று முக்கிய முடிவு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

 அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று  நடக்கிறது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுமாம். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியில் பனிப்போர் நிலவி வருகிறது. அண்ணாவை விமர்சித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியது அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆவேசமாக அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தனர்.

   'பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி இல்லை' என்று டி.ஜெயக்குமார் அதிரடியாக அறிவித்தார். பா.ஜ.க. துணை தலைவர்கள் கரு.நாகராஜன், சக்ரவர்த்தி உள்பட நிர்வாகிகள் எதிர்க்கருத்துகளை வெளிப்படுத்தினார்கள். அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே வார்த்தை யுத்தம் அரசியல் களத்தை பரபரப்பாகியது. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இந்த சூழ்நிலையில் பா.ஜ.க. பற்றியோ, கூட்டணி குறித்தோ நிர்வாகிகள் யாரும் பொதுவெளியில் கருத்துகள் தெரிவிக்க கூடாது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய்மொழி உத்தரவை பிறப்பித்தார்.

  முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே பிரச்சினை எதுவும் இல்லை என்று அறிவித்தார். இதன் மூலம் பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. நீடிக்கும் என்று பலரும் கருதுகிறார்கள். ஆனால் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலருக்கு பா.ஜ.க.வுடனான கூட்டணியில் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

   சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று பிற்பகல் 3.45 மணிக்கு இந்த கூட்டம் தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணியை தொடரலாமா? வேண்டாமா என்பது குறித்து  விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

 இந்த கூட்டத்துக்கு பின்னராவது அதிமுக தன் நிலைபாடை தெளிவாக வெளியிடுமா?