பாஜகவில் இருந்து விலகிய சில நிமிடங்களில் அதிரடி.. நடிகை கவுதமி புகாரில் வழக்குப்பதிவு..!

உ.சசிகுமார்,
முன்னாள் நடிகை கௌதமியின் சொத்து அபகரிக்கப்பட்டதாக அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர், பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த அடுத்த சிலமணி நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நடிகை கவுதமியின் புகாரின் அடிப்படையில் அழகப்பன், அவரது மனைவி உட்பட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது 25 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரித்ததாக கௌதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த செப்டம்பரில் புகார் அளித்திருந்தார்.
அதேபோல் கோட்டையூரில் ரூ.7.70 கோடி மதிப்புள்ள சொத்துகளை அபகரித்ததாகவும் கௌதமி புகார் அளித்திருந்தார். கௌதமி அளித்த இரு புகார்களிலும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் தனிப்பட்ட முறையில் அவர் ஏமாந்ததற்கு பாஜக எப்படி பொறுப்பேற்க முடியும் என பாஜக பிரமுகர் திருப்பதி நாராயணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கௌதமி ஒரு சிறந்த திரைப்பட கலைஞர். அமைதியானவர். பண்பானவர். நல்லவர். தன்னை அழகப்பன் என்ற ஒருவர் மோசடி செய்து விட்டதாகவும், அதனால் மனம் உடைந்து போய் வேதனையுடன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டிருக்கிறார். 20 வருடங்களாக அழகப்பனை தனக்கு தெரியும் என்றும், தானாகவே அவரிடம் சொத்துக்கள் குறித்த ஆவணங்களை அளித்ததாக கூறி விட்டு, இந்த விவகாரத்தில் பாஜக தனக்கு உதவவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது முரண்.
அந்த நபர் பாஜகவில் எந்த பொறுப்பிலும் இல்லாத நிலையில், அவருடைய தனிப்பட்ட விவகாரத்தில் எப்படி கட்சி தலையிட முடியும்? மேலும் சில மூத்த தலைவர்கள் அழகப்பனுக்கு உதவி புரிவதாக சொல்வதும் முறையல்ல என எண்ணுகிறேன். அப்படி யாராவது உண்மைக்கு எதிராக துணை நிற்பதாக கௌதமி அவர்கள் நிரூபித்தால், நான் அவருக்கு பக்கபலமாக இருந்து குரல் கொடுக்க தயார்.
கௌதமி நீண்ட நாட்களாக கட்சியில் உள்ளார், அவர் மூலம் தான் அழகப்பனுக்கு பாஜகவில் உள்ள சிலருக்கு அறிமுகம் ஏற்பட்டிருக்கும் என்று எண்ணுகிறேன். அப்படியானால், அவர் எப்படி மற்றவர்களை குற்றம் சொல்ல முடியும் என்று புரியவில்லை. ஒருவேளை, யாரேனும் அவர் ஏமாற்றப்பட்டது தெரிந்து அவருக்கு எதிராக செயல்பட்டதாக ஆதாரம் இருந்தால், வெளிப்படையாக கட்சியின் தலைவர்களிடம் கூறியிருக்கலாம்.
மேலும் ராஜபாளையம் தொகுதியில் கடைசி நிமிடத்தில் தனக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்று கூறியிருப்பது அவரின் அரசியல் முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்துகின்றது. கடைசி நிமிடத்தில் என்று அவர் கூறியிருப்பதிலிருந்தே, அவருக்கு வாய்ப்பு கொடுக்க கட்சி தலைமை முடிவு செய்திருந்தது என்பதையும், கூட்டணி காரணமாக அந்த தொகுதியில் போட்டியிட முடியாததால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதும் தெரிகிறது.
அவருடைய பிரச்சினைக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதோடு, அவரே அவரின் பிரச்சினைகளை வரவழைத்து கொண்டிருக்கிறார் என்பதும் தெளிவாகிறது. அவர் தன்னை மோசடி செய்தவர் மீது புகார் கொடுத்திருக்கிறார். காவல்துறை விரைவாக குற்றச்சாட்டுக்கு ஆளான அழகப்பனை கைது செய்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து கௌதமிக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்ய நாம் தயாராய் உள்ளோம். உணர்ச்சி வசப்பட்டு கௌதமி கட்சியிலிருந்து விலகுவதாக எடுத்துள்ள முடிவிலிருந்து பின் வாங்கினால் மகிழ்ச்சி. இல்லையேல் அது அவரின் தனிப்பட்ட தவறான முடிவு. அவர், நல்லவர், அவர் ஏமாற்றப்பட்டது கட்சியாலோ, கட்சியினராலோ அல்ல. அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு அருள் புரியட்டும். அவரின் பிரச்சனைகள் விரைவில் தீரட்டும் என்று கூறியிருக்கிறார்.