26.500 கஞ்சா பறிமுதல்! சோதனைச்சாவடியால் சிக்கினர்!

எம்.ஏ.கண்ணன்.
தேவதானப்பட்டி சோதனைச் சாவடியில் 26.500 கஞ்சா பறிமுதல் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல்,கேரளாவைச் சேர்ந்த 2 பேர் கைது.
ஆந்திராவில் இருந்து தேனி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு கஞ்சா கடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தி வந்த வாகனம் தேனி மாவட்ட எல்லையில் பிடிபட்டுள்ள சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி காவல் காவல் ஆய்வாளர் அபுதல்ஹா தலைமையில் தேனி - திண்டுக்கல் எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கேரள பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
காரில் வந்த கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த சோனி (32)மற்றும் ராஜேஷ் ஆகியோரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்வதில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
எனவே காவல்துறையினர் காரை சோதனை செய்ததில் அந்தக் காரில் 7 பொட்டலங்களாக 26.500 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.காருடன் கஞ்சாவையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின,
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலா என்ற பகுதியைச் சேர்ந்த சஜூ (35) என்பவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே பிரம்மதேவ் என்னும் பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தார். அப்போது அவருக்கு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சூரஜ் ஒடிசாவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து ஆந்திராவில் சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மேலும் சஜுவின் நண்பரான கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரும் கொல்லம் பகுதியில் கஞ்சா விற்க்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சஜு மற்றும் சூரஜ் ஆகியோர் இணைந்து ஒடிசாவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து,
கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த தனது நண்பரான ராஜேஷ் மற்றும் சோனி (32) ஆகியோரை ஆந்திராவுக்கு வரவழைத்து அவர்களிடம் 26 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக கேரளாவிற்கு கொடுத்து அனுப்பியதும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து சஜு (35),சோனி (32),சூரஜ் ,மற்றும் ராஜேஷ் ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்த தேவதானப்பட்டி காவல்துறையினர் சஜீ மற்றும் சோனி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 26.5 கிலோ கஞ்சா, ரூபாய்.12,500 ரொக்க பணம்,இரண்டு செல்போன்கள் மற்றும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.கடத்திவரப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 26.5 லட்சம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
சமீபகாலமாக ஆந்திராவில் இருந்து கேரளாவிற்குவும்,தேனி மாவட்டத்திற்கும் கஞ்சா கடத்தி வரப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதற்காக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குருவிகளாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.