102 தொகுதிகள்:- நாளை வாக்குபதிவு! எங்கெல்லாம் என அறியுங்கள்!!

ம.பா.கெஜராஜ்,
தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள் உள்ளிட்ட 102 தொகுதிகளில் நாளைக்கு வாக்கு பதிவு நடக்கவுள்ளது. இதற்காக தேர்தல் அலுவலர்கள் இப்பணிகளை தங்களுடைய முழுகட்டுப்பாட்டில் கொண்டுவந்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவை தொகுதிகளிலும், அதனுடன் மேற்கண்ட மாநிலங்களில் சில பகுதிகளிலும் நாளை முதற்கட்ட வாக்குபதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும்.
இந்நிலையில் கடந்த 4 வாரங்களாக நடைபெற்று வந்த அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
தமிழகத்தில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
இதற்கான பிரச்சாரத்தை முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் தொடங்கி சென்னையில் முடித்தார். அதேபோல, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் பிரச்சாரத்தை தொடங்கி அதிமுக வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து தனது பிரசாரத்தை சேலத்தில் முடித்தார்.
இந்த தேர்தலில் தமிழகத்தில் 6,23,33,925 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். தமிழகத்தில் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை (19ம் தேதி) வாக்களிக்கும் மக்கள், தேர்தல் முடிவை தெரிந்து கொள்ள 45 நாட்கள் காத்திருக்க வேண்டும். அதாவது ஜூன் 4ம் தேதிதான் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, தேர்தல் முடிவுகள் வெளியாகும்.
68,321 வாக்குப்பதிவு மையத்துக்கும் இன்று வாக்கு இயந்திரங்கள் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 1,59,100 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 82,014 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 88,783 விவிபேட் இயந்திரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று வாக்கு மையங்களுக்கு அவை பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்படும்.
மேற்படி வாக்கு சாதனங்கள் வாக்குப்பதிவுக்கு தேவையான எண்ணிக்கையைவிட 20 சதவீதம் அதிகம். இன்று மாலைக்குள் வாக்குப்பதிவு இயந்திரங்கள், அழியாத மை மற்றும் தேர்தலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் முழு போலீஸ் பாதுகாப்புடன் தமிழகத்தில் மொத்தமுள்ள 68,321 வாக்குப்பதிவு மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
இதற்காக 6,137 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டல குழுவிலும் 2 வருவாய் துறை அதிகாரிகள், 2 துப்பாக்கி ஏந்திய போலீசார், ஒரு பெல் நிறுவன இன்ஜினீயர் இருப்பார். ஒரு மண்டல குழுவினர் குறைந்தபட்சம் 10 வாக்குப்பதிவு மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பொருட்களை பாதுகாப்பாக எடுத்து செல்வார்கள்.
மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் இன்று மாலைக்குள் வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்துவிடுவார்கள். அவர்கள் கையெழுத்து போட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாலை 6 மணிவரை அரசியல்வாதிகளின் பிடியிலிருந்த தேர்தல் களம் தற்போது தேர்தல் அலுவலர்களின் கைபிடிக்குள் சென்றுள்ளது.
குறிப்பாக தமிழ்நாடு, அசாம், பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் முதல் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் 39 தொகுதி, புதுச்சேரி 1, உத்தர பிரதேசத்தில் 8 தொகுதி, மத்திய பிரதேசத்தில் 6 தொகுதி, மகாராஷ்டிரா மற்றும் உத்தரகாண்டில் தலா 5 தொகுதிகள் உள்பட மொத்தம் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகள் தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்காக தேர்தல் அலுவலர்கள் இப்பணிகளை தங்களுடைய முழுகட்டுப்பாட்டில் கொண்டுவந்திருக்கிறார்கள்.