முன்னாள் காதலன் வெறிச்செயல்! பெண்ணுக்கு கத்தி வெட்டு!

முன்னாள் காதலன் வெறிச்செயல்! பெண்ணுக்கு கத்தி வெட்டு!

ஜி.கே.சேகரன்,

 திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த எல்ஐசி பில்டிங் பின்புறம் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த குமார் மகள் இந்துமதி. அதே பகுதியைச் சேர்ந்த அனுமுத்து மகன் அஜித் குமார் ஆகிய இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது.

 இந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வர கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் இந்துமதியை திருமணம் செய்து வைத்துள்ளனர். ரிந்த தம்பதியருக்கு  ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது. அப்படியிருக்க இந்துமதிக்கும் கணவர் கார்த்திக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வாணியம்பாடியை விட்டு ராஜீவ் காந்தி நகர் பகுதியில் உள்ள அம்மா வீட்டிற்கு வந்துள்ளார்.

 இந்த சூழலில் இந்துமதிக்கு முன்னாள் காதலன் அஜித் குமாருடன் மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் நன்றாக பேசி வந்த நிலையில் திடீரென இந்துமதி பேச மறுத்து விலகியதாக தெரிகிறது. அதனால் விரக்தியில் இருந்த அஜித் குமார் திருப்பத்தூர் நகர் பகுதியில் இந்துமதியை சந்தித்து பேசி உள்ளார். 

 அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அஜித்குமார் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முகம் மற்றும் இந்துமதியின் உடம்பில் பல்வேறு பகுதிகளில் வெட்டி விட்டு தப்பியுள்ளார்.

 இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இந்துமதியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்துமதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 இதனை அறிந்த அஜித்குமார் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் தானாக சென்று சரணடைந்தார்.

இது தொடர்பாக திருப்பத்தூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் ரஜினி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.