வெள்ளப்பகுதிகளில் 100 பொறியாளர்கள் ஆய்வு! அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

ஜி.கே.சேகரன்,
மழைகாலங்களில் வீணாகும் நீரை ஆறுகளிலேயே அதிக அளவில் தடுப்பணைகளை அமைத்து நீரை சேமிப்போம் அதற்காக முன் மொழிவுகள் அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது - வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பொறியாளர்கள் சேதங்களை மதிப்பீடு செய்யும் பணியையும் சேதங்களுக்கு நிரந்தர தீர்வு காண கணக்கெடுத்து வருகின்றனர் என காட்பாடியில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி
வேலூர்மாவட்டம், காட்பாடி பிரம்மபுரம் பகுதியில் புதிய காவல் நிலையத்தை தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவங்கி வைத்தார்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி மற்றும் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் மதிவாணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், துணைமேயர் சுனில்குமார், மாமன்ற உறுப்பினர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
பின்னர் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், புதிய நீர் நிலையை உருவாக்குவது குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழ்நாட்டில் அணைகள் கட்ட வேண்டிய பெரிய ஆறுகளில் எல்லாம் அணையை கட்டிவிட்டோம்.
இனி தேடி தான் அணையை கட்ட வேண்டும், ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் இரண்டு மூன்று நாட்களில் வடிந்துவிடுகிறது.
இதனால் பிரயோஜனமில்லை அதனால் சிறு சிறு தடுப்பணைகளை கட்டினால் தண்ணீர் தேங்கி நிற்கும் அதன் விளைவு சுற்றுவட்டார பகுதிகளில் கிணறுகளில் நீர் சுரக்கும், விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படும்.
4 அடி தண்ணீர் நிற்கும் குகையநல்லூரில் ஒரு தடுப்பணையை கட்டி திறந்தேன். சுற்றுவட்டார பகுதிகளில் தண்ணீர் மேலே வந்தது கலைஞர் காலத்தில் மாயனூர் அணையை கட்டினோம் அங்கு வளம் கொழிக்கிறது.
போன வருடம் எங்கெல்லாம் தடுப்பணை கட்ட பணம் கொடுத்தார்களோ அங்கெல்லாம் தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டுவிட்டது.
அடுத்த ஆண்டு அதிக அளவில் ஆறுகளில் தடுப்பணை கட்டப்படும், அதற்கான முன் மொழிவை நீர்வளத்துறை மூலம் அரசுக்கு அளித்துள்ளேன்.
வெள்ளபாதிப்புகளை கணக்கிட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 6 பேர் விழுப்புரம் கடலூரில் முகாமிட்டுள்ளனா,¢ என்னுடைய நீர் வளத்துறையின் செயலாளர் மணிவாசகன் விழுப்புரத்தில் பணியாற்றி வருகிறார்.
புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நீர் நிலைகள் சேதாரங்களை கணக்கெடுத்து அவற்றை முடிப்பதற்கும் சீர் செய்வதற்கும், அதே போல் தற்காலிகமாக சீர் செய்வதற்கும் நிரந்தரமாக சீர் செய்ய என்ன மதிப்பு என்பதற்கும் அதிக அளவு பொறியாளர்கள் தேவைப்பட்டார்கள்.
அதற்காக நான் கோயம்புத்தூரிலும், திருச்சியிலும் என 80 பொறியாளர்களை புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பியுள்ளோம்.
அவர்களும் போதவில்லை என்றால் திருநெல்வேலியிலிருந்து 40 பொறியாளர்களை அனுப்புங்கள் என சொல்லியிருக்கிறேன்.
கிட்டத்தட்ட நீர் வளத்துறை சார்பில் 100 பொறியாளர் சுற்றி எங்கெங்கு அடைப்புகளை அடைத்து நிரந்தர தீர்வு காண எவ்வளவு தொகையாகும் என்பதை கணக்கீடு செய்து வருகின்றனர். புயல் நிவாரண நிதி போதுமானதாக இல்லை என எதிர்க்கட்சி குற்றம்சாட்டுவது குறித்து கேட்டதற்கு அது குறித்து நிதியமைச்சர் பதில் கூறுவார் என்று சொன்னார்.