ஜார்ஜ் கோட்டைக்கும் - ராஜ்பவனுக்கும் இடையே டிஸ்யூம் டிஸ்யூம்?

ம.பா.கெஜராஜ்,
சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையும், ராஜ்பவனும் சுமுகமாக இருந்து வந்த நிலையில் தற்போது இவை இரண்டுக்கும்மிடையே டிஸ்யூம், டிஷ்யூம் நடந்து வருவதாகவே புரிந்துக் கொள்ளப்படுகிறது.
குறிப்பாக தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையேயான உறவில் சிறிது சிறிதாக உரசல் தற்போது வலுத்து வருகிறது. இது இப்படியே போனால், மேற்குவங்கம், கேரளா, போன்று தமிழக அரசுக்கு மத்தியில் ஆளுநரிடம் விரிசல் ஏற்படும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.
இவர்களின் மோதல் போக்கானது, நீட் மேட்டரிலேயே துவங்கிவிட்டது.
நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என்று திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரலெழுப்பினர். அந்த வரிசையில் ஏராளமான மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் இருப்பதாக ஆளுங்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர் மயிலாடுதுறைக்கு சென்ற ஆளுநருக்கு திமுக கூட்டணி கட்சிகள் கருப்புக் கொடி கட்டியது பெரும் பேசுபொருளானது. ஆளுநர் கான்வாய் மீது கொடிகள் வீசப்பட்டதாகவும், கற்கள் வீசப்பட்டதாகவும் பிரச்சனை எழுந்தது. இதைக்கூட பாஜகவினர் தான் குற்றம் சாட்டினர்.
அதே நேரத்தில் ஆளுநர் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் கற்களோ, கொடிகளோ மற்றும் எந்தப் பொருட்களாலும் பாதிக்கப்படாமல் காவல் துறையால் பாதுகாக்கப்பட்டன என்ற செய்தியை ஆளுநருடைய பாதுகாப்பு அதிகாரி, காவல் துறை இயக்குநருக்குக் கடிதம் மூலம் குறிப்பிட்டுக் காட்டியிருப்பதாக பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் தந்துள்ளார்.
இதற்கு முன், தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்த ஆளுநர் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார். ஆனால், அதனை ஆளுங்கட்சியான திமுகவும், திமுக கூட்டணி கட்சிகளும் கவர்னரின் டீ பார்ட்டியை புறக்கணித்தன.
டீ பார்ட்டியை திமுக அரசு புறக்கணித்தது ஆளுநர் தரப்பை சூடாக்கியதாக ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த பின்னணியில், ஆர்.என்.ரவி டெல்லி கிளம்பி சென்றார். அங்கு, தனது கான்வாய் தாக்கப்பட்டது, டீ பார்ட்டி புறக்கணிப்பு உள்ளிட்ட தமிழக அரசியல் மற்றும் அரசின் நடவடிக்கைகள் பற்றி பாஜக மேலிடத்திடம் ஆளுநர் விரிவாக விவாதித்ததாக கூறப்படுகிறது. அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், டெல்லியில் இருந்து திரும்பிய கையோடு திமுக அரசை மீண்டும் சீண்டிப் பார்க்கும் வேலையில் ஆளுநர் இறங்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். டெல்லியில் இருந்து வந்த உடனேயே துணை வேந்தர்கள் மாநாட்டை நீலகிரியில் உள்ள ராஜ்பவனில் ஆர்.என்.ரவி கூட்டியதை சுட்டிக்காட்டுகின்றனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ராஜ்பவனில், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இரண்டு நாள் மாநாடு தொடங்கியுள்ளது. ‘வளர்ந்து வரும் புதிய உலக ஒழுங்கில் இந்தியாவின் பங்கு', '2047-க்குள் இந்தியா உலகத் தலைவராக இருக்கும்.’ ஆகிய இரண்டு தலைப்புகளில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
அதே நேரத்தில் இந்த மாநாடு பற்றி தமிழக அரசிடம் ஆலோசிக்காமல் கவர்னர் தன்னிச்சையாக முடிவெடுத்ததாக கூறுகிறார்கள் இதன் உள்விவரம் அறிந்தவர்கள்.
நீலகிரி துணை வேந்தர்கள் மாநாட்டுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லையாம். அதிகாரப்பூர்வமாக இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டுமானால், உயர்கல்வித்துறை அமைச்சர், அத்துறையின் செயலர் ஆகியோர் கலந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள் யாரும் மாநாட்டில் கலந்து கொள்ளாததன் மூலம், தமிழக அரசு சார்பில் யாருக்கும் ஆளுநர் அழைப்பு விடுக்காதது மோதல் போக்கை உறுதியாகிறதாக கூறுகிறார்கள்.
மேலும், பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் பேராசிரியர் எம்.ஜெகதீஸ்குமார், ஜோஹோ கார்ப்பரேஷன் முதன்மை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இதில் ஸ்ரீதர் வேம்பு பாஜக ஆதரவாளர் என்றும், யூ.ஜி.சி தலைவர் ஜெகதீஸ்குமார் மத்திய அரசின் பக்கவாத்தியம் என்றும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்த நிலையில், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதற்கு இடையே, சர்ச்சைக்குரிய துணை வேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் கூட்டியுள்ளார்.
தேசிய கல்விக் கொள்கைக்கு இன்றளவும் திமுக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், “காலத்தின் தேவைக்கேற்ப உயர்கல்வியை மாற்றியமைக்க, தேசிய கல்விக் கொள்கையை அதன் உண்மையான உணர்வில் செயல்படுத்த வேண்டும்.” பல்கலைக்கழக துணைவேந்தர்களை ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.
துணை வேந்தர்கள் மாநாட்டை பொறுத்தவரை, அதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை. ஆளுநர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். ஆனாலும், கவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசை ஆளுநர் புறக்கணிப்பதில் தவறேதுமில்லை என்றும் பா.ஜ.க/வினர் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து திமுக வட்டாரங்கள் கூறுகையில், மாநில அரசின் நலன் சார்ந்து செயல்படாத ஆளுநரை கண்டிக்கும் வகையில் தான் தேநீர் விருந்து புறக்கணிப்பு செய்யப்பட்டது. ஆனால், அலுவல் பூர்வமாக நடக்கும் ஒரு மாநாட்டுக்கு தமிழக அரசுக்கு அழைப்பு விடுக்காதது கண்டிக்கத்தக்கது என்கிறனர்.
அதேசமயம், எந்த துணை வேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் கூட்டியுள்ளாரோ அதே துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநரின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமசோதாவை இன்று தாக்கல் செய்யவே முதலில் திட்டமிடப்படவில்லை. ஆளுநருக்கு செக் வைக்கும் வகையிலேயே மாநாட்டை அவர் கூட்டிய நிலையில், அவரது அதிகாரத்தை பறிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்கிற ரீதியல் டிஷ்யூம் டிஷ்யூம் எகிறிக் கொண்டே இருக்கிறது.
இதன் பின்னணி என்னபதலை வேறு ஒரு கட்டுரையின் வாயிலாக உங்கள் "லைவ்லுக்" விளக்கும்