டி.எம்.சி. தண்ணீர் என்றால் என்ன? அறிவோம் வாருங்கள்!!

ஜி.எஸ்.மேத்யூராஜ்,
டி.எம்.சி. என்கிற வார்த்தை மழைக் காலங்களிலும், தண்ணீர் பற்றாக்குறைக் காலங்களிலும் பயன்படுத்தப் படுவதை அறிந்திருப்போம்.
காவிரியில் இவ்வளவு டிஎம்சி தண்ணீர் திறந்து விட்டுள்ளார்கள், அணையில் இருந்து இவ்வளவு டிஎம்சி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்படுகிறது, குடிநீருக்காக இவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது என்பது குறித்தும் கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால், டிஎம்சி என்றால் என்ன என்பது நம்மில் பலருக்கு அறிய வாய்ப்பில்லை அல்லவா? அது குறித்து பார்ப்போம்.
டிஎம்சி என்பது ஆயிரம் மில்லியன் கியூபிக் என்பதன் சுறுக்கமாகும். அதாவது ஒரு டிஎம்சி நீர் என்பது 100 கோடி கனஅடி நீர் ஆகும். இதைத்தான் சுருக்கமாக டிஎம்சி என்று கூறி வருகிறோம்.
1 கன அடி நீர் என்பது 28.3 லிட்டர் தண்ணீருக்கு சமம். அப்படியானால் 1 டிஎம்சி என்பது 2,830 கோடி லிட்டர் தண்ணீர்.
ஒரு டி.எம்.சி தண்ணீரை சேமிக்க வேண்டுமென்றால் 12,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரி சுமார் 24 லட்சம் லாரிகள் தேவைப்படும்.
ஒரு டி.எம்.சி தண்ணீரை 1லிட்டர் பாட்டிலில் போட்டு ரூ.20 என்று விற்பனை செய்தால், ஏறக்குறைய ரூ. 56 கோடிக்கு விற்பனை செய்யலாம்.
இதுல பார்த்தீங்கன்னா, விநாடிக்கு 2,600 கன அடி நீர் கடலில் கலக்கிறது. அதாவது, 4 நாட்களுக்கு ஒரு டிஎம்சி தண்ணீர் வீணாகிறது. ஒரு டிஎம்சி நீரைக் கொண்டு பல ஏரிகளை நிரப்பலாம். 12 டிஎம்சி நீரைக் கொண்டு சென்னைக்கு ஓராண்டுக்குக் குடிநீர் வழங்க முடியும்.
தமிழகத்தில் உள்ள மேட்டூர் ஆணை சுமார் 1,700 மீட்டர் நீளம் கொண்டது. இந்த அணையின் முழுக் கொள்ளளவு 93.4 டிஎம்சி ஆகும். தமிழகத்தின் சுமார் 12 -க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.
காவிரியில் உள்ள வேறு அணை
களான ஹேமாவதி, ஹாரங்கி இரண்டும் நிரம்பினால் அந்த நீர் கிருஷ்ணராஜசாகருக்கு வந்து சேரும். ஹேமாவதி, ஹாரங்கி அணைகளின் தண்ணீர் கேஆர்எஸ் வந்து அதன் மூலமே தமிழகத்திற்கு வரும்.
இதில், கபினி அணை 15.67 டிஎம்சியும், ஹேமாவதி 35.76 டிஎம்சியும், ஹாரங்கி அணை 8.07 டிஎம்சியும் கொள்ளளவு கொண்டது. கிருஷ்ண ராஜசாகர் அணை 45.05 டிஎம்சி தண்ணீர் கொள்ளவு ஆகும்.
ஆக மொத்தம் கர்நாடகாவில் காவிரி பாசன அணைகளில் 105.55 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.
கர்நாடகாவில் திறந்து விடப்படும் காவிரி நீர் முழுவதையும் தாங்கி நிற்கும் அணையாக மேட்டூர் உள்ளது.
தற்போதைய மழைக்காலங்களில் நாம் எவ்வளவு டிஎம்சி தண்ணீரை வீணாக்கி வருகிறோம், எவ்வளவு தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது, இதுகுறித்து ஆட்சியாளர்கள் பேசியதே இல்லை.
ஆண்டுக்கு 100 டிஎம்சி முதல் 400 டிஎம்சி வரையிலான மழைநீர் கடலில் கலக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.