திமுக பெண் தலைவரை தாக்கிய திமுகவினர்!

ஜி.கே.சேகரன்,
ஊராட்சி பணிகளை செய்ய விடாமல் தடுககும் திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவரை தட்டி கேட்ட பெண் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய திமுக மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மற்றும் அவரது சகோதரர் உட்பட இருவர் மீது காவல் நிலையத்தில் புகார்.
திருப்பத்தூர் மாவட்டம் ,ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு பகுதியில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதே பகுதியை சேர்ந்த பாரதிஸ்ரீ என்பவர் 560 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இவர் ஏற்கனவே இரண்டு முறை ஒன்றிய கவுன்சிலராக இருந்து வந்தவர். இந்த நிலையில் கடந்த மாதம் ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்ற பின் ஊராட்சி செயலராக உள்ள நிரஞ்சனா என்பவரிடம் கணக்குகளை காண்பிக்க கூறியதாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சினை திமுக பேர்ணாம்பட்டு ஒன்றிய கழக துணைச் செயலாளராக உள்ள சேகர் என்பவரிடம் பஞ்சாயத்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போது ஆரம்பித்த உட்கட்சி பிரச்சினை உள்ளாட்சி விதிகளின்படி ஊராட்சி மன்ற தலைவர் செய்யக்கூடிய ஊராட்சி பணிகளை திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவரும், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளருமான ராஜன்பாபு அத்துமீறி மறைமுகமாக தலையிட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று நரியம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பனந்தோப்பு பகுதிக்கு சென்ற ராஜன்பாபு அவரது சகோதரர் பிரதீப் உள்ளிட்ட திமுகவினர் சிலர் மின்மோட்டார் அமைக்கும் பணியை செயல்படுத்தி கொண்டுள்ளதாக ஊராட்சி மன்ற தலைவருக்கு தெரிய அங்கு சென்ற ஊராட்சி மன்ற தலைவர் பாரதிஸ்ரீ ஊராட்சி நிர்வாகத்தில் எனக்கு தெரியாமல் தலையிட கூடாது என்று எச்சரித்துள்ளார். அப்போது நீ யார் கேட்பதற்கு என்று திமுக பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ராஜன் பாபு மற்றும் அவர்து தம்பி பிரதீப் ஆகியோர் பெண் என்று பாராமல் அவரை தரக்குறைவாக பேசியதாகவும் பிரதீப் தாக்கியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உமராபாத் காவல் நிலையத்தில் பாதிக்கபட்ட பெண் ஊராட்சி மன்ற தலைவர் புகார் அளித்துள்ளார்.
புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த உமராபாத் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து பாதிக்கபட்ட பெண் ஊராட்சி மன்ற தலைவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்தன்னை தாழ்த்தப்பட்ட சமுதாயப் பெண் என பாராமல் இஸ்லாமிய மக்கள் மற்றும் இந்துக்கள் இரண்டு முறை ஒன்றிய கவுன்சிலராகவும் ,தற்போது நடந்து முடிந்த தேர்தலில் 560 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்துள்ளனர்.
பதவியில் இல்லாத போதும் கொரோனா மற்றும் மழை காலங்களில் தலைமை அறிவுறுத்தலின் பேரில் ஊராட்சி மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினேன்.
பதவி ஏற்றுக் கொண்டபின் ஊராட்சி செயலரை கணக்கு கேட்ட விவகாரத்தில் திமுக பேர்ணாம்பட்டு ஒன்றிய கழக துணை செயலாளர் சேகர் மற்றும் திமுக மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ராஜன் பாபு ஆகியோர் மறைமுகமாக தங்களது ஊராட்சியில் உள்ளாட்சி விதிமுறைகளை மீறி ஊராட்சி பணிகளை செய்யவிடாமல் தடுத்து வருகிறார்கள்.
அதனை தட்டி கேட்ட போது ராஜன் பாபுவின் தம்பி பிரதீப் என்பவர் என்னை தாக்கினர்.
என்னை எந்த பணிகளையும் செய்யவிடாமல் தடுககும் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ராஜன்பாபு மற்றும் ஒன்றிய துணைச் செயலாளர் சேகர் ஆகியோர் மீது தலைமை கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.