விஏஓ விடம் கைவரிசை காட்டிய இளைஞர்கள் கைது!

விஏஓ விடம் கைவரிசை காட்டிய இளைஞர்கள் கைது!

கு.அசோக்,

ஆம்பூர் வாணியம்பாடி சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோரிடம் தொடர் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இருவர் கைது!அவர்களிடமிருந்து 5 செல் போன் மற்றும் விலை உயர்ந்த இருசக்கர வாகனம் பறிமுதல் செய்த தனிப்படை போலீசார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வாணியம்பாடி மற்றும் பள்ளிகொண்டா பகுதிகளில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோரிடம் தொடர்ந்து செல்போன் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வந்தது.

 இந்நிலையில் கடந்த வாரம்  கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும் பாபு என்பவர் பணி முடித்து மின்னுரிலிருந்து ஆம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு இளைஞர்கள் அவரின் செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்றுள்ளனர்.

  இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பாபு ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு செல்போன் வழிப்பறியில் ஈடுபடுபவர்களை தேடி வந்த நிலையில் இருவர் சிக்கினர்.

 போலிசார் ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கி விசாரணை மேற்கொண்டதில் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்த ஜெயசூர்யா மற்றும் சந்திப் என்பதும், இவர்கள் இருவரும் தொடர்ந்து கந்தனேரி, வடபுதுப்பட்டு , மின்னூர் ஆகிய பகுதிகளில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

  இதனைத் தொடர்ந்து இருவர்கள் மீதும் ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்த 5 செல்போன் மற்றும் விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.