சென்னையை விட்டு எஸ்கேப் ஆகும் ரவுடிகள்! களையெடுப்பை தொடங்கிய காவல் ஆணையர்!

ம.பா.கெஜராஜ்,
ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தொடர்ந்து, சென்னை சிட்டி மற்றும் தமிழகம் முழுவதிலும் பல்வேறு மாற்றங்களை அரசு செய்திருக்கிறது. அதில் சென்னை போலிஸ் ஆணையரை மாற்றியது கவனிக்கப்படக்கூடியதாக உள்ளது. இந்நிலையில் பல ரவுடிகள் சென்னை சிட்டியை விட்டு ஆந்திர மாநிலத்துக்கு எஸ்கேப் ஆகி வருகிறார்கள்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த 5-ம் தேதி மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். உணவு டெலிவெரி செய்யும் ஊழியர்கள் போல் உடை அணிந்து வந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிவிட்டனர்.
பின்னர் சரண்டர், கைது என்று 11 பேர் பிடிபட்டதாக காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இருந்தாலும், லெட்டர் பேடு கட்சி முதல் எதிர்கட்சிவரை அரசை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில், சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு புதிய காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டார். இதேபோல் தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல்டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.
காவல் ஆணையரான அருண் பொறுப்பேற்ற பின்னர் தொடர்ந்து போலிஸ் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
அதில் எடுக்கப்பட்ட சில முடிவுகளின் அடிப்படையில், அதிகாரிகளுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அந்த வகையில், சென்னை காவல் மாவட்டத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு தொடர்புடைய 2 கூடுதல் காவல் ஆணையர்கள், 4 இணை ஆணையர்கள், 12 துணை ஆணையர்கள், 48 உதவி ஆணையர்கள் போலிஸாரின் ரோந்து பணிகளை நேரடியாக மேற்கொள்ள வேண்டும்.
இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் தினமும் இரு வேளை ரோந்து செல்ல வேண்டும். போலிஸார் தங்கள் காவல் வாகனங்களில் மின் விளக்குகளை எரியவிட்டவாறு மக்கள் பார்க்கும் வகையில் ரோந்து பணி செல்ல வேண்டும்.
இதன் மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு உறுதி அளிப்பதோடு, சமூக விரோதிகளுக்கு அச்சம் ஏற்படும். எனவே, இதை போலிஸார் கண்டிப்புடன் செய்ய வேண்டும்.
மேலும், ரவுடி பட்டியல் உள்ளவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்த வேண்டும் எனவும் காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், இந்த பணியில் சுணக்கம் காட்டும் காவல்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை மட்டும் அல்லாமல் பணியிடை நீக்கம் செய்யப்படவும் வாய்ப்புள்ளது என காவல் ஆணையர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இவ்வாறு,அருண் மற்றும் டேவிட்சன் ஆசிர்வாதம் ஆகிய இரண்டு ஐ.பி.எஸ்.அதிகாரிகளும் ரவுடிகள் ஒழிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மேலும் தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளை கணக்கெடுத்து அவர்களின் செயல்பாடுகளை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையில் தமிழக காவல் துறை நடவடிக்கை எடுத்துவருகிறது.
இதனையறிந்த ரவுடிகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய குற்றவாளிகளும் சென்னையை விட்டு எஸ்கேப் ஆகிவருகிறார்கள்.