பைனான்சியரை பழி வாங்க மகனை கடத்தி கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை! திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி அதிரடி தீர்ப்பு!

ஜி.கே.சேகரன்,
திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரிமலை அத்தனாவூர் கிராமத்தை சேர்ந்தவர் குட்டி, பைனான்சியரான அவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் பத்தாயிரம் ரூபாய் வட்டிக்கு பணம் வாங்கினார். ஆனால் அந்த கடனை திருப்பி தர மறுத்ததால், பெருமாளின் இரு சக்கர வாகனத்தை குட்டி எடுத்துச் சென்றதாக தெரிகிறது.
பின்னர் தனியார் விடுதி உரிமையாளரிடம் பெருமாள் எனது இருசக்கர வாகனத்தை குட்டியிடமிருந்து மீட்டுத் தாருங்கள் என கூறி இருசக்கர வாகனத்தை குட்டி இடம் இருந்து பெருமாள் எடுத்துச் சென்றுள்ளார்.
இருந்த போதும், தனது இருசக்கர வாகனத்தை குட்டி எடுத்துச் சென்ற காரணத்தால் அவர் மீது கோபத்தில் இருந்துள்ளார் பெருமாள்.
அதற்கு பழிவாங்க திட்டமிட்ட பெருமாள், பைனான்சியர் குட்டியின் மகனான எட்டு வயது ராகேஷ் குமாரை 16.12.2013 தேதி தனது கள்ளக்காதலியான காளியம்மாள் உதவியுடன் கடத்தி சென்று ஒகேனக்கல் ஆற்றில் கழுத்தை நெரித்து கொலை செய்து 150 அடி பள்ளத்தில் தூக்கி வீசினார்.
பின்னர் எதுவும் தெரியாது போல் திரும்பவும் வீடு திரும்பி உள்ளார். அதன் பின் குட்டி தனது மகன் காணவில்லை என ஏலகிரி மலை போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். பின்னர் ஏலகிரி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுவனை தேடி வந்தனர்.
அப்போது ஏலகிரி மலை போலீசார் பொன்னேரி கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் விடியற்காலை பெருமாள் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
அவரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். அதன் பின்னர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் ராகேஷ் குமாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இது குறித்து வழக்கு விசாரணை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் சரவணன் தரப்பில் வாதாடப்பட்டது. இந்த நிலையில் மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி சிறுவனை கொலை செய்த குற்றத்திற்காக பெருமாளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் பத்தாயிரம் அபராதமும், கடத்திய குற்றத்திற்கு ஐந்தாண்டும் பத்தாயிரம் அபராதமும் கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும் பெருமாளின் கள்ளக்காதலியான காளியம்மாள் இந்தக் குற்றத்தில் போதிய அளவு ஈடுபடாததால் அவரை விடுதலையும் செய்து தீர்ப்பு வழங்கினார்.
சிறுவனின் தந்தையிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக பழி வாங்குவதற்காக சிறுவனை கொலை செய்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனை வழங்கிய தீர்ப்பு திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.