சிறுவனை கொன்ற வெயில்! குலதெய்வம் கோவிலுக்கு சென்ற போது பரிதாபம்!

கு.அசோக்,
குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்ற 14 வயதுடைய சிறுவன் வெயில் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டம், ரத்தனகிரி அடுத்த டி,சி குப்பம் பகுதியை சேர்ந்தவர் சத்யா(43). இவர் முன்னாள் ராணுவ வீரர் இவரது மனைவி வெண்ணிலா(40). இந்த தம்பதியர்களுக்கு அர்ஷன் (14 ), பரத் (12) ஆகிய இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சத்யா தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை அழைத்துக் கொண்டு நத்தம் மலை மீது அமைந்துள்ள மூங்கில் வாழி அம்மன் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக சென்றார். மலை அடிவாரத்தில் இருந்து நடைபயணமாக அவர்கள் சென்றுள்ளனர். இது அவர்களின் குலதெய்வ கோவிலாகும்.
அப்போது அதிகப்படியான வெயிலின் காரணமாக நடந்து சென்று கொண்டிருந்த சத்யாவின் மூத்த மகன் அர்ஷன் திடீரென மயங்கி விழுந்து உள்ளார். மயங்கி விழுந்த அர்ஷனை தூக்கிக்கொண்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அளிப்பதற்கு கொண்டு சேர்த்துள்ளனர்.
அப்போது மயக்க நிலையில் இருந்த அர்ஷனை சோதனை செய்த மருத்துவர்கள் அர்ஷன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அவர்களது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் குறித்து ரத்தினகிரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு சென்ற 14 வயதுடைய சிறுவன் வெயில் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.