ஊழல்வாதிகளை காப்பாற்றுவதுதான் திமுக - காங்கிரஸ் கட்சிகளின் குறிக்கோள்:- கோவையில் பிரதமர் பேச்சு!

ம.பா.கெஜராஜ்,
ஊழல்வாதிகளை காப்பாற்றுவதுதான் திமுக - காங்கிரஸ் கட்சிகளின் முக்கியமான குறிக்கோள் என்று கோவை மேட்டுப்பாளையத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
கோவை மேட்டுப்பாளையத்தில் நடந்த பாஜக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் கோவை, நீலகிரி, பொள்ளாச்சி தொகுதி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், "எனது அன்பான தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம்.
கொங்கு மண்டலத்தில் உள்ள நீலகிரி எப்போதுமே பாஜகவுக்கு முக்கியமான இடங்களாகும். காரணம், வாஜ்பாய் காலத்தில் நீங்கள்தான் பாஜகவுக்கு எம்.பியை தேர்வு செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பினீர்கள். தமிழகத்தில் நான் செல்லும் இடங்களில் எல்லாம் பாஜகவின் அலை வீசுகிறது. மக்கள் அனைவரும் பேசத் தொடங்கிவிட்டனர். திமுகவுக்கு விடை கொடுக்க தயாராகி விட்டனர். அதனால்தான், நாம் கூறுகிறோம் மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்று.
திமுக - காங்கிரஸ் உள்ளிட்ட குடும்ப கட்சிகளுக்கு ஒரே ஒரு குறிக்கோள்தான் இருக்கிறது. ஏதாவது பொய் சொல்லி, மக்களை ஏமாற்றி ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய ஒரே குறிக்கோள். இப்படி பல தலைமுறைகளாக ஆட்சியில் இருக்கும் இவர்கள் கூறும் ஒரே பொய் வறுமையை ஒழிப்பதாக கூறுவதுதான். ஆனால், அவர்கள் இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்தும் நாட்டில் வறுமையை ஒழிக்கவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த உடனே வந்த செய்த வேலை 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டிருக்கிறோம்.
காங்கிரஸ் - திமுக தலைமையிலான கூட்டணி பல தலைமுறைகளாக ஆட்சியில் இருந்து வருகின்றனர். இவர்களுடைய ஆட்சியில், கோடிக்கணக்கான பட்டியல், பழங்குடியின மக்களை வீடுகள் இல்லாமல், மின்சாரம் இல்லாமல், குடிக்க தண்ணீர் இல்லாமல் தவிக்கவிட்டு வந்தனர். காரணம், காங்கிரஸ் - திமுகவின் அடிப்படை எண்ணமே, அந்த மக்களுக்கு இந்த அடிப்படை வசதிகள் கிடைத்துவிடக் கூடாது, அவர்கள் அப்படியேத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணினார்கள்.
பாஜக அரசு பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான மக்களுக்கு வீடுகளை வழங்கியிருக்கிறது. ஒவ்வொரு கிராமத்துக்கும் மின்சாரம் வழங்கியிருக்கிறது. 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்கியிருக்கிறது. இதைப் பெற்றவர்களில் பலர், பட்டியலின மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள்தான்.
குடும்ப கட்சிகளைச் சேர்ந்தவர்கள், எப்போதும் அவர்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பதவிக்கு வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஏழை, பட்டியலின, பழங்குடியின மக்கள் உயர் பதவிகளுக்கு வருவதை அவர்கள் விரும்புவதும் இல்லை, அனுமதிப்பதும் இல்லை. ஆனால், இந்தியாவில் முதன்முறையாக ஒரு பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்ணை நாட்டின் குடியரசுத் தலைவராக்கி அழகு பார்த்தது பாஜக அரசு. அதற்கும் இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் ஆதரவு அளிக்காமல் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தியா கூட்டணியில் இருப்பவர்கள் இந்தியாவின் திறமையை நம்புவதில்லை. உதாரணமாக, கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில், இந்தியாவிலேயே மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மருந்து தயாரிப்பதாக கூறினோம். ஆனால் அவர்கள் அதை எள்ளி நகையாடினா?. ஆனால், அந்த தடுப்பூசியை நாங்கள் இந்தியாவிலேயே தயாரித்து அந்த கூட்டணிக்கு சவால் விடுத்தோம். அந்த மருந்து மூலம் இந்தியா மட்டுமின்றி, பல உலக நாடுகளைச் சேர்ந்த மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டது.
கொரோனா காலக்கட்டத்தில் இந்தியாவின் பொருளாதாரமும் சீர்குலைந்துவிடும் என்று அன்று அந்தக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் ஆரூடம் கூறினார்கள். அந்த கடுமையான காலக்கட்டத்தில், நாட்டில் உள்ள சிறு, குறு தொழில்களைப் பாதுகாப்பதற்காக, எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு 2 லட்சம் கோடி நிதி உதவியை பாஜக அரசு வழங்கியது. அதனால்தான், தொழில் நகரமான இந்த கோவையில் ஆயிரக்கணக்கான எம்எஸ்எம்இ நிறுவனங்கள் காப்பாற்றப்பட்டன. லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.
தமிழகத்தில் ஏராளமான திறமையும், மனித ஆற்றலும் நிறைந்திருக்கிறது. ஆனால், திமுக அரசு இங்கு மிகுந்திருக்கும் மனித சக்தியையும், ஆற்றலையும் வீணடித்துக் கொண்டிருக்கிறது. கோவை பகுதியில் ஜவுளித் தொழில் மிகச்சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஜவுளித் தொழிலை காப்பாற்ற வேண்டிய திமுக அரசு, அத்தொழிலை முடக்கும் வகையில், மின் கட்டணங்களை உயர்த்தி வருகிறது. அதனால், வரக்கூடிய இழப்புகளை எல்லாம் மக்கள் மீது திணிக்கிறார்கள்.
நம்முடைய நாடு மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உலகில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த முதலீடுகளை எல்லாம் வரவிடாமல் முடக்கி வருகிறது திமுக அரசு. திமுக தன்னுடைய சுய லாபத்துக்காக, தமிழகத்துக்கு அதிகபட்ச கேடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
கோவை உட்பட தமிழகத்தின் இரண்டு முக்கிய நகரங்களில், மல்டிமாடல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மிகப் பெரிய வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. கோவை பகுதிக்கு இரண்டு வந்தே பாரத் ரயில் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல், கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டிருக்கிறது.
நாட்டில் இந்தியா கூட்டணி, பாரபட்சம், பிரிவினைவாதம் என்ற ஆபத்தான விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் திமுகவும் அந்த விளையாட்டை விளையாடுகிறது. இது மிகவும் ஆபத்தானது.
ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழகத்தில் கோடிக்கணக்கான வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.
ஆனால், அந்த திட்டத்தில், திமுகவினர் மட்டும் பயன் அடையும் வகையில் திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. இன்றளவும் இந்த கோவைப் பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறைதான், குடிக்க தண்ணீர் கிடைக்கிறது என்பது மிகவும் வருத்தமான விஷயம்.
திமுக எப்போதுமே ஒரு வெறுப்பு அரசியலைத்தான் செய்து வருகிறது. திமுகவின் கவனம் எப்போதுமே தமிழகத்தின் வளர்ச்சி மீது இருந்தது இல்லை. ஆனால், நான் உங்களுக்கு ஒரு உறுதி அளிக்கிறேன். என்டிஏ அரசாங்கம் மூன்றாவது முறையாக ஆட்சியமைத்து செயல்படும்போது, இந்த கொங்கு மண்டலம், நீலகிரியின் வளர்ச்சிக்காக இன்னும் வேகம்காட்டி வேகமாக செயல்படுவோம் என்று நான் உறுதியளிக்கிறேன்.
திமுக அரசும், இந்தியா கூட்டணியும் எதிர்ப்பு அரசியல், வெறுப்பு அரசியலைத் தவிர உருப்படியாக எதையுமே செய்தது இல்லை. கோவை சங்கமேஸ்வரர் கோயிலில் தீவிரவாத தாக்குதல் நடைபெறுகிறது. ஆனால், அதை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய மாநில அரசு, தீவிரவாதிகளை காப்பாற்றவும், பாதுகாக்கவும் வேண்டிய வேலைகளை செய்கிறது.
சுரண்டலுக்கும், ஊழலுக்கும் இன்னொரு பெயர்தான் திமுக. இன்று இந்தியா 5ஜி என்ற உலக சாதனை படைத்து வருகிறது. ஆனால், திமுக 2ஜியில் ஊழல் செய்து நமது நாட்டையே அவமானப்படுத்தியது. ஊழல்வாதிகளை காப்பாற்றுவதுதான் திமுக - காங்கிரஸ் கட்சிகளின் முக்கியமான குறிக்கோள்.
அதற்குதான் அவர்கள் முன்வருவார்கள். நான் சொல்கிறேன். ஊழலை ஒழிப்போம். ஊழல்வாதிகளை தண்டிப்போம். ஆனால், அவர்கள், ஊழல் செய்வோம், ஊழல்வாதிகளை காப்பாற்றுவோம் என்று கூறிவருகின்றனர்.]
ஒரு வாரத்துக்கு முன்பு நான் கச்சத்தீவு பிரச்சினையை எழுப்பினோம். காங்கிரஸும், திமுகவும் எப்படி ஒன்றாக சேர்ந்து இந்தியாவின் உயிரோட்டமான ஒரு பகுதியை வேறு நாட்டுக்கு தாரைவார்த்துக் கொடுத்தார்கள் என்பது குறித்து அரசு ஆவணங்கள் வெளியிடப்பட்டன.
அப்போதுதான் தெரிந்தது, அவர்கள் தமிழகத்துக்கு இழைத்த அந்த துரோகம். இந்தியா கூட்டணியினர் இந்தியாவின் இறையாண்மையை சேதப்படுத்தியதற்கு பாவப்பட்ட தமிழக மீனவர்கள்தான் அதற்கான விலையைக் கொடுத்து வருகின்றனர். திமுகவும், காங்கிரசும் செய்த இந்து துரோகத்துக்காக, வரும் ஏப்ரல் 19-ம் தேதி மக்கள்தான் அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.