புகார் மனுக்களை மாலையாக அணிந்து வந்த விவசாயி!

கு.அசோக்,
விவசாய நிலத்திற்கு செல்ல அரசு தரிசு நிலத்தில் பட்டா வழங்க வேண்டும் என பல முறை மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையாம். ஆகவே இதுவரை வழங்கிய அனைத்து மனுக்களையும் மாலையாக அணிந்து வந்த விவசாயி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சேத்துவண்டை, ராஜா கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பக்தவச்சலம். இவருக்கு சொந்தமாக 7 ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்தில் தொடர்ந்து விவசாயம் செய்து வருகிறார்.
இந்த விவசாய நிலத்திற்கு வரும் அரசு தரிசு நிலத்திற்கும் சேர்த்து கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வரி செலுத்தி வருவதாகவும், ஆகவே அந்த நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என 40-க்கும் மேற்பட்ட மனுக்களை உரிய அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார் அந்த விவசாயி.
ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை எனக் கூறி அவர் அளித்து மனுக்களை மாலையாக அணிந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தார்.