அதிமுக வுக்காக திறந்து வைக்கப்பட்டிருந்த பாஜக கதவுகள் மூடப்பட்டன!

அதிமுக வுக்காக திறந்து வைக்கப்பட்டிருந்த பாஜக கதவுகள் மூடப்பட்டன!

ம.பா.கெஜராஜ்,

 இனி அதிமுகவை கூட்டணிக்கு அழைக்கமாட்டோம் என்று பாஜக திட்டவட்டமாக முடிவெடுத்துவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

 ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக 2019-ல் நாடாளுமன்ற தேர்தலையும், 2021-ல் சட்டபேறவை தேர்தலையும்சந்தித்தது. அப்போதெல்லாம் பாஜகவுடன் கூட்டு வைத்திருந்தது. அதே போல் தான் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக பாஜக கூட்டணி வைத்து களம் காணும் என கனிக்கப்பட்டது.

  ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக 991-1996ல் ஜெயலலிதா முதல்வராக இருந்த காலம்தான், நாட்டிலேயே மோசமான ஊழல் நிறைந்த ஆட்சி என்று அண்ணாமலை விமர்சனம் செய்தார். இதனால் டெல்லி மேலிடத்தில் அண்ணாமலை மீது எடப்பாடி நேரடியாக புகார் செய்தார். அவரை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்க வற்புறுத்தினார். ஆனால், அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது மேலிடம்.

 அதேநேரத்தில் மதுரையில் பேசிய அண்ணாமலை, அண்ணா குறித்து தவறான தகவல்களை வெளியிட்டு ஜாதியை வைத்து பிரித்தாளும் நடவடிக்கையில் இறங்கினார். இது அண்ணா பெயரில் கட்சி நடத்தும் அதிமுகவுக்கு கடும் தர்மசங்கடத்தை உருவாக்கியது.

  இதனால் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக எடப்பாடி அறிவித்தார். அவர் அண்ணாமலை மீது உள்ள கோபத்தில் அறிவிக்கிறார். அதிமுகவினர் பலர் ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ளனர். எடப்பாடியின் உறவினர்கள் மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறையின் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் அவரை எப்படியும் பேசி வழிக்கு கொண்டு வந்து விடலாம் என்று பாஜக மேலிடம் கருதியது.

  அதே நினைப்பில் கடந்த 2 மாதங்களாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருக்கு நெருக்கமான வேலுமணி, தங்கமணி ஆகியோர் மூலம் பாஜக தலைமை பேசி வந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி பிடி கொடுக்காமல் இருந்து வந்தார். இது டெல்லியில் ஆளும் பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  ஒரு கட்டத்துக்கு பின்னர் அதிமுக வுக்காக பாஜக கதவுகள் திறந்தே வைக்கப்பட்டிருக்கிறது என்று அமித்ஷா அறிவித்தார். அதற்கு அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மறுத்து பேட்டியெல்லாம் கொடுத்து பரபரப்பை கூட்டினார், அவரது பேட்டி பாஜகவின் அழைப்பை நிராகரிக்கும் விதமாகவே அமைந்தது.

  பொறுத்து பார்த்த பாஜக, எடப்பாடியுடன் பேசுவதை பாஜக நிறுத்திக் கொண்டது. இனி அவருடன் எந்தப் பேச்சுவார்தையும் வேண்டாம் என்று அமித்ஷாவும், மோடியும் கூறிவிட்டனர். இதையடுத்து தமிழகத்தில் பாஜக தலைமையில் தனி அணி அமைப்பது குறித்து நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

   பாஜக கூட்டணியில் ஏற்கனவே அங்கம் வகித்த தேமுதிக, பாமக, புதிய தமிழகம், தமிழக முன்னேற்றக்கழகம் ஆகிய கட்சிகளை தட்டி தூக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.     

   அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு தனி அணியாக செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வத்தை ஏற்கனவே பாஜக வளைத்து போட்டிருக்கிறது. இந்நிலையில், பாஜக கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.