முதலைக்கு கூச்ச சுபாவமாம்! வனத்துறை செயலாளர் அபத்தம்!

முதலைக்கு கூச்ச சுபாவமாம்! வனத்துறை செயலாளர் அபத்தம்!

 ம.பா.கெஜராஜ்,

  மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பெருங்களத்தூர் பகுதிக்கு முதலை ஒன்று அடித்துவரப்பட்டது. இந்த செய்தி வெளியான பின்னர், முதலை  பிடிப்பட்டதாக வனத்துறையினர் அறிவித்தனர். அதோடு பிரச்சனையை விடாத வனத்துறையின் செயலாளர் சுப்ரியா சாஹு பிடிபட்ட முதலை ரொம்பவே கூச்ச சுபாவம் கொண்டது என தடாலடியாக சொல்லி வம்பில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.

    7 அடி நீளம் கொண்ட பயங்கர முதலை பெருங்களத்தூர் பகுதியில் இரவு நேரத்தில் ஆவேசமாக இரை தேடியதைப் பார்த்து மக்கள் அலறியடித்து ஓடினர்.

   சாலையில் முதலை உலாவுவது தெரியவந்ததால், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கடும் அச்சம் அடைந்தனர். மேலும், தாங்கள் சாலையில் நடப்பதற்கே பயமாக இருப்பதாக அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.

   இந்த முதலையை பெருங்களத்தூர் அருகே உள்ள ஆலம்பாக்கம் ஏரியில் பார்த்த மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன்பேரில், அங்கு சென்ற வனத்துறையினர் அதனை  பிடித்தனர்.

  இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு, "யாரும் அந்த முதலையை பார்த்து பயப்பட வேண்டாம். அது கூச்ச சுபாவம் கொண்ட முதலை. பொதுமக்களை ஒன்றும் செய்யாது" எனத் தெரிவித்திருந்தார்.

  சுப்ரியா சாஹுவின் இந்த கருத்து கடும் கண்டிப்புக்கு உள்ளானது. பார்ப்போரை வேட்டையாடக் கூடிய கொடிய உயிரினமான முதலையை ஏதோ ஆடு, மாடு போல சாதாரணமாக சொல்கிறாரே என அவருக்கு எதிராக மக்கள் கருத்து தெரிவித்தனர்.

 வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு கூறியதை விமர்சித்து பத்திரிகையாளர் பாண்டியன் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், "சுப்ரியா சாஹு என்ன சொல்றாங்க தெரியுமா? அந்த முதலை கூச்ச சுபாவம் கொண்டதாம். யாரையும் கடிக்காதாம். வெட்கம் வேற படுமாம். இதை சொல்றதுக்கு அந்த அம்மா ஐஏஎஸ் படிக்கணுமா? கூச்ச சுபாவமான முதலையாம். நான் கேக்குறேன். கூச்ச சுபாவமான பாம்பை காட்டுங்கம்மா. கூச்ச சுபாவமான மலைப்பாம்பை காட்டுங்கம்மா.

 கூச்ச சுபாவமான சிங்கம், புலியை காட்டுங்கம்மா. ஒரு முதலை அடித்து வரப்பட்டிருக்கு. அது எங்கே இருந்து அடித்து வரப்பட்டது என்பதை கண்டுபிடிக்க வேண்டியது வனத்துறையின் கடமை, ஆனால் வனத்துறை செயலாளர் அது யாரையும் கடிக்காதுப்பானு சொல்றாங்க. அது இதுவரை எத்தனை பேரை இழுத்துட்டு போச்சுனே யாருக்கும் தெரியல, வனத்துறை செயலாளர் மக்களை எச்சரிக்கனுமே தவிர இப்படி அபத்தமாக சொல்லக்கூடாது என்கிறார்.