68 வயதில் நீட் தேர்வு எழுதும் தஞ்சாவூர்காரர்!

ஜி.பாலகுரு,
68 வயதில் நீட் தேர்வு எழுதுகிறார் தஞ்சாவூர்காரர்.
நாளை மறுநாள் (17-ந் தேதி) மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தமிழகத்தில் நடைபெற உள்ளது. தற்போது பிளஸ் -2 முடித்தவர்கள், இளம் வயது உடையவர்களே ஆவர். இந்நிலையில் தேர்வு எழுத வயது வரம்பு கிடையாது என்ற தளர்வின் பேரில் முதியவர்கள் நீட் நுழைவு தேர்வு எழுதுகின்றனர்.
கடந்த ஆண்டு சென்னையை 64 வயதான சுப்பிரமணியன் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருந்தார். இதேப்போல் தருமபுரியை சேர்ந்த 61 வயதான சிவபிரகாசம் என்பவரும் தேர்வு எழுதி வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் தற்போது தஞ்சையை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரும் வழக்கறிஞருமான 68 வயதான ராமமூர்த்தி என்பவர் நாளை மறுநாள் நடைபெற உள்ள நீட் நுழைவு தேர்வை எழுத உள்ளார்.
மேற்சொன்ன நீட் எழுதிய பெருசுகளைக் காட்டிலும் இவர் சற்று வித்தியாசமானவர்.
அதாவது இவர் 28 டிகிரி முடித்து சாதனை படைத்துள்ளார். தற்போது நீட் தேர்வு எழுதுவதின் மூலம் தனது நீண்ட கால ஆசையான டாக்டராக வேண்டும் என்ற கனவை நனவாக்க முயல்கிறார்.
இவர் திருவாரூர் மாவட்டம் திருவிழிமிழலை கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் என். ராமமூர்த்தி (வயது 68). தஞ்சையில் பால் தணிக்கை துறையில் வேலை பார்த்து ஓய்வுபெற்றவர்.
இதனால் வேலை பார்க்கும் போதே குடும்பத்துடன் தஞ்சைக்கு வந்துவிட்டார். தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள தமிழ் பல்கலைக்கழகம் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது மனைவி கமலி. இவர்களுக்கு அகிலா, கோகிலா என்ற இரண்டு மகள்களும், முத்துராமலிங்கம் என்ற மகனும் உள்ளனர்.
சிறுவயதில் இருந்தே ராமமூர்த்திக்கு படிப்பின் மீது தீராத காதல் இருந்து வந்தது. விழித்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் படித்துக் கொண்டே இரு என்ற வாசகத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறார்.
இதுவரை 28 டிகிரி முடித்து பெற்றுள்ளார் என்பதே அதற்கு சான்றாக அமைந்துள்ளது. அவ்வளவு டிகிரி முடித்தும் அவருக்கு படிப்பின் மீது இருந்த ஆர்வம் துளியும் குறையவில்லை. தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்கிறார். வழக்கறிஞர் பணி, கல்வி போதனை, பள்ளி நிர்வாகம், ஆடிட்டிங், மனநல ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து படித்து வருகிறார்.
அதன் விளைவாக தான் தற்போது 68 வயதிலும் நீட் தேர்வு எழுத உள்ளார். தேர்வு அறிவிக்கப்பட்ட உடனே விண்ணப்பம் செய்திருந்தார். அவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு ஹால்டிக்கெட் வந்துவிட்டது. நாளை மறுதினம் நீட் தேர்வு எழுத தயாராகி வருகிறார்.