எம்.ஆர்.எஃப் தொழிற்சாலைக்கு சப்போர்ட்:- செய்தியாளர்களுக்கு எதிராக எகிறி குதித்த எஸ்.ஐ.!
கு.அசோக்,
நீண்ட நாட்களாக சம வேலை சம ஊதியம், தரமான உணவு, உரிய பாதுகாப்பு வசதிகள் கோரி இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த இச்சிபுத்தூர் பகுதியில் எம்.ஆர்.எஃப் டயர் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இதில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அதற்கு ஆதரவு தெரிவித்த அதிமுக பிரமுகர்களை கைது செய்ததுடன், செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை குற்றவாளிகளை போல நடத்தி முகம் சுளிக்கவைத்திருக்கிறார் ஒரு எஸ். ஐ.
இது பற்றின விவரம் வருமாறு,
கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி அன்று தொடங்கிய இவர்களது போராட்டம் ஆனது பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு வந்தது.
நேற்று பணியில் இருந்த ஒப்பந்த பணியாளர்கள் தொடர் போராட்டத்தை குறித்து தொழிற்சாலை முன்பு கூட்டம் நடத்துவதாக திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்திற்கு முறையான அனுமதி பெறவில்லை எனக் கூறி காலை முதலே காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவிக்கப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக அண்ணா தொழிற்சங்க மாநில பேரவை செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில், கழக அமைப்பு செயலாளர் கோ.ஹரி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அங்கு வந்தனர்.
அதிமுகவினர் ஒன்று கூடுவதை கண்ட காவல்துறையினர் முறையான அனுமதி இல்லாமல் தொழிற்சாலை முன்பு கூட்டம் கூடுவது சட்டப்படி குற்றமென்றும் உடனடியாக அனைவரும் கலைந்து செல்லுமாறு தெரிவித்தனர்.
காவல்துறையினரின் இந்த எச்சரிக்கை மீறி தொழிலாளர்களும், அதிமுகவினரும் ஒன்று கூடியதை அடுத்து காவல்துறையினர் அதிமுக நிர்வாகிகள் உட்பட பலரை கைது செய்தனர்.
இதன் காரணமாக தொழிலாளர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஆனது ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடைத்து வைத்த திருமண மண்டபத்திற்கு செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் சென்றபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி செய்தி சேகரிக்க விடாமல் வலு கட்டாயமாக குற்றவாளிகளை போல் வெளியேற்றியதால் காவல்துறையினருக்கும் மற்றும் செய்தியாளர்களுக்கும் இடையே சிறிது நேரம் கடுமையான வாக்குவாதம் நிலவியது.
மேலும் காவல்துறையினர் தனியார் தொழிற்சாலை நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு செய்தி வெளியிடாமல் இருக்கும் வகையில் செய்தியாளர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதாக அதிமுகவினர் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் கூச்சலிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது
குறிப்பாக எஸ்.ஐ.மோகன்ராஜ் என்பவர் ரொம்பவே கூவி தொழிற்சாலை நிர்வாகத்துக்கு விசுவாசம் காட்டினார்.