மல்டி கலர் கிரானைட் குவாரி அமைக்க மக்கள் எதிர்ப்பு! கலெக்டர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம்!

மல்டி கலர் கிரானைட் குவாரி அமைக்க மக்கள் எதிர்ப்பு! கலெக்டர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம்!

 ம.பா.கெஜராஜ்,

  வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே கிரானைட் குவாரி அமைப்பது குறித்து கலெக்டர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

   பேரணாம்பட்டு தாலுகா ராஜக்கல் ஊராட்சியில், கல்லேரி மலைப்பகுதியில்  அமைக்கப்பட உள்ள மல்டி கிரானைட் சுரங்கத்திற்கு சுற்றுசூழல் அனுமதி பெறுவதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் அழிஞ்சிக்குப்பம் கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு வேலூர் மாவட்ட கலெக்டர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப. தலைமை தாங்கி பேசிய போது ஏற்கனவே ராஜக்கல் ஊராட்சி கல்லேரி மலையில் கிரானைட் குவாரி இயங்கி வந்து, இடையில் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் கிரானைட் குவாரியை அரசே நடத்த முடிவு செய்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. சாதகம் மற்றும் பாதகமான சூழ்நிலை குறித்து கருத்து கேட்டு முடிவு செய்யப்படும்.  கிரானைட் குவாரி நடத்தலாம் அல்லது நடத்தகூடாது என்பது பற்றி கருத்து தெரிவித்து பேசலாம் எழுத்து மூலமாகவும் கருத்துரை வழங்கலாம் என்று பேசினார்.

 பின்னர்  தமிழ்நாடு கனிமவள (டாமின்) தலைமை அலுவலக துணை மேலாளர்கணேசன், கோட்ட மேலாளர் கதிரவன் ஆகியோர் கிரானைட் குவாரி எப்படி இயங்கும் என்பது குறித்து விளக்கினர்.

   கூட்டத்தில் ராஜக்கல் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் வெங்கடேசன், செல்வராஜ், வேலூர் மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி பொது செயலாளர் அருண், நாம் தமிழர் கட்சி தொகுதி துணை செயலாளர் சரவணன் மற்றும் சமூக ஆர்வ லர்கள் உ.சசிகுமார், எச்.ஷரீப்பாஷா ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

 அதில் கூறப்பட்டதாவது,

  இராஜாக்கல் சர்வே எண்.311 (பகுதி) கலர் க்ரானைட் குவாரி அமைய உள்ள கல்லேரிமலை மலையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குட்பட்ட இடத்தில் பாலாறுக்கு நீர் ஆதராமான மலட்டாறு மற்றும்   மூன்று ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ளன. கல்லேரி மலைக்கு செல்லும் பாதை நீரோடையில் உள்ளது. அதே போல் அழிஞ்சிக்குப்பம், ராஜாக்கல் மற்றும் மேல் வைத்தியனாங்குப்பம் ஆகிய மூன்று பஞ்சாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு அடிப்படை ஆதாரமான குடிநீர் வழங்கிக் கொண்டிருக்கும் 13 ஆழ்துளை கிணறுகள் அரைகிலோமீட்டர் தொலைவில் உள்ள நீர்வரத்து கால்வாயில் அமைக்கப்பட்டிருக்கிறது.

   டாமின் திட்டமிட்டப்படி குவாரி அமைந்தால் அருகில் உள்ள மேற்படி கிராமங்களுக்கு குடிநீர் தட்டுபாடு கண்டிப்பாக ஏற்படும். கலர் கிரானைட் சுரங்கத்தின் ஆழம் 30 மீட்டர் என தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் நீர்நிலைகளை இது பாதிக்கும். சுப்ரிம் கோர்ட்டில் தொடரப்பட்ட 914/1991 என்கிற பொது நல வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கும் வழிகாட்டுதல் உத்தரவின்படி அபாயகரமான தொழிற்சாலைகளை 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் அமைக்க மாசு கட்டுபாட்டு வாரியம் அனுமதிக்க வேண்டும் என்கிற நிலை உள்ளது.  அந்த தீர்ப்பை, இராஜக்கல்லில்  அமையவுள்ள குவாரி  திட்டத்தில் பின்பற்றப்படவேண்டும். ஏற்கனவே இராஜாக்கல் சர்வே எண்.311 ல் உள்ள 72.44.0 ஹெக்டேர் நிலம் தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கு குத்தகையாக வழங்கப்பட்டு, பின்னர் மோசமான ஈட்டுதலை தருவதால், நிலத்தை அரசாங்கத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதை மனதில் கொள்ள வேண்டும்.

   அவ்வாறு குறைந்த அளவு உற்பத்திக்காக மக்களுக்கும், கால் நடைகளுக்கும் வாழ்க்கை முறை மாறிவிடும் அபாயம் உள்ளது. குவாரியிலிருந்து  கிரானைட்டுகளை ஏற்றிச் செல்ல வரும் டிரக்குகள் போக வர சாலைகள் பொருத்தமானதாக இல்லை, குறுகிய சாலைகள் ஆங்காங்கே வளைவுகளுடனே உள்ளது என்பது சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கே தெரிந்திருக்கும். அவற்றை சீர் செய்யவேண்டியது முக்கிய பணியாக உள்ளது. பெரிய அளவு அகலம் 30 மீட்டர் ஆழம் என பாறைகளை வெட்டி எடுத்தால் கண்டிப்பாக நில அதிர்வு ஏற்படும்.  அதை துல்லியமாக கணக்கிடும் கருவியை  அமைக்க வேண்டும்.

    குவாரியில் பாறைகளை வெட்டி எடுக்க பயன்படுத்தவுள்ள இயந்திரங்களால் ஒலிமாசு ஏற்படாதபடிக்கு இருக்க வேண்டும். குவாரியில் தூசி அடக்குவதற்காக தேவைப்படும் நீர் ஆதாரத்தை பற்றி தெளிவாக குறிப்பிடவில்லை. மக்கும் தன்மை இல்லா கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான வழிமுறைகள் வெளிப்படையாக வகுக்கப் படவில்லை.

 மேலும், தோண்டப்பட்ட சுரங்கத்தை சுற்றி கால்நடைகள் ஏதும் நுழையா வண்ணம் வேலி அமைக்கப்படும். மேலும் இந்த சுரங்ககுழியில் மழைநீர் மற்றும் நிலத்தடி நீர் சேமிக்கப்பட்டு அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

  குவாரி துவங்க மூலதனம் ரூ. 2,25,000/ எனவும், வேலி அமைப்பதற்கான செலவு ரூ. 1,25,000/- எனவும் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் அந்த செலவில் வேலி அமைக்க முடியுமா என்பதை மக்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தல் வேண்டும். இந்த குவாரியை தனி நபர்களுக்கு பகுதி பகுதியாக குத்தகை கொடுக்கபடுமா? அல்லது முழுக்க முழுக்க அரசே கலர் கிரானைட்டை வெட்டி எடுக்குமா என்பதையும் தெளிவு படுத்த வேண்டும். கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்க வேண்டும், மேலும்  மாசு ஏற்படுத்துதல், முறைகேடு அல்லது விபத்து, இடையுறு ஏதும் மேற்படி கிரானைட் குவாரியில் ஏற்பட்டால் பொதுமக்கள் எங்கு? யாரிடம்? எப்படி? முறையிடுவது. அதற்கான விலாசம், தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவை வழங்கப்பட வேண்டும், ராஜக்கல், அழிஞ்சிக்குப்பம், எம்.வி.குப்பம் ஆகிய ஊராட்சிகளுக்கு குடிநீர் ஆதாரமாக கல்லேரி மலை இருந்து வருகிறது. இங்கு கிரானைட் குவாரி அமைக்கப்பட்டால் விவசாயம், சுற்றியுள்ள வீடுகள் பாதிக்கப்படும்.ஏற்கனவே இயங்கி வந்த குவாரியில் 2 உயிரிழப்பு சம்பவம் நடந்துள்ளது. எனவே கிரானைட் குவாரி அமைக்கக்கூடாது என எதிர்ப்பும், கருத்துரைகளும் கூறப்பட்டது.

  இந்தக்கூட்டத்தில் அழிஞ்சிக்குப்பம் பஞ்சாயத்தைச் சேர்ந்த நூறு நாள் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு கூட்டத்தை அதிகமாக காட்டினர். மேலும் குவாரி அமைய இருக்கும் ராஜாக்கல் பஞ்சாயத்தில் தான் இந்த கூட்டத்தை நடத்தியிருக்க வேண்டும், அங்கும் மண்டபம் உள்ளது, பொதுவான கோவிலும் உள்ளது அங்கு நடத்தியிருக்கலாம் என்றகிறார்கள். ஆனால் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத மாசுகட்டுபாடு வாரிய அலுவலர் ஒருவர் இவுங்க என்ன பேசுனா என்ன செய்துவிடமுடியும் 10 பேர்கொண்ட கமிட்டி உள்ளது அவுங்க முடிவுபண்ணிட்டா குவாரி நடக்கும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். இதையறிந்த சமூக ஆர்வலர்கள் அப்படியென்றால் நீதிமன்றத்தின் உதவியைதான் நாடவேண்டும் என்று சொல்கிறார்கள்.

 இந்த கூட்டத்தில் சப் கலெக்டர் (பொறுப்பு) ராமச்சந்திரன், தாசில்தார் நெடுமாறன், மண்டல துணை தாசில்தார் பலராமன், ஒன்றிய ஆணையாளர்கள் ஹேமலதா, எழிலரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.