மிளகுக்கு மாற்றாக பப்பாளி விதையும் பருத்திக் கொட்டையும்!

மிளகுக்கு மாற்றாக பப்பாளி விதையும் பருத்திக் கொட்டையும்!

  ஜி.கே.சேகரன்,

   பொங்கல் தொகுப்பு தரமற்றதாக வழங்கப்படுவதாக பல்வேறு இடங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தபடி உள்ளது. குறிப்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் பரவலாகவே இந்த விவகாரம் மீடியாக்களில் இடம் பிடித்துவருகின்றன.

   அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே தமிழக அரசு கொடுத்த பொங்கல் தொகுப்பு தரமற்ற பொருட்கள் வழங்கி உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டின் பேரில் உதவி தர ஆய்வாளர் தற்காலிகமாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

 மேற்படி பகுதியில் உள்ள மோட்டூர் ஊராட்சிக்குட்பட்ட நியாயவிலை கடையில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பு தரம் இல்லை எனக் கூறி சாலையில் வீசி எறிந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

    மோட்டூர் ஊராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளை கொண்டிருக்கும் கடை எண் சி2513 ல் நேற்று பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது இந்த தொகுப்பில் மிளகு பதிலாக,பப்பாளி விதையும், பருத்திக் கொட்டையும், மஞ்சள் தூள் வீட்டிற்கு வெளியே போடும் கோலமாவு போல் உள்ளது எனவும் ரேஷன் அரிசியை அரைத்து ரவையாக கொடுத்திருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

   இதனால் தரமற்ற பொருள் வழங்கப்பட்டதால் விரக்தி அடைந்த பொதுமக்கள் பொங்கல் தொகுப்புகளை பிரித்து சாலையில் கொட்டி வீசி ஆதங்கத்தை தெரிவித்தனர்.

  இந்த நிலையில் இதனுடைய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

  அதனை தொடர்ந்து தமிழக முதல்வர் உடனடியாக இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

  அதன் அடிப்படையில் உதவி தர ஆய்வாளர் ரவிச்சந்திரன் என்பவர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள.

 மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அனைத்து பொருட்களும் சரியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நாளை அந்த பகுதியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.