விமான சாகசத்தை பார்க்க சென்ற 5 பேர் பலி! 240 பேர் மயக்கம்! 93 பேர் அட்மிட்!!

ம.பா.கெஜராஜ்,
சென்னையில் நடைபெற்ற விமான சாகசத்தை பார்க்க சென்ற 5 பேர் பலி ஆனார்கள். மேலும் 240 பேர் மயக்கம் அடைந்தநிலையில் 93 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.
இந்திய விமானப்படை 93-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு விமானங்கள் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 11 மணி முதல் ஒரு மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை சாதனை நிகழ்வாக மாற்ற பொதுமக்கள் அதிக அளவில் கலந்துகொண்டு கண்டுகளிக்க வேண்டும் என விமானப்படை அழைப்பு விடுத்தது. 15 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்ப்பு தெரிவித்திருந்தது.
அதன்படி, சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரயில், மெட்ரோ ரயில், பேருந்து மூலமாக நேற்று காலை 7 மணி முதல் சென்னை மெரினா கடற்கரை நோக்கி மக்கள் வரத்தொடங்கினர்.
அதிலும், சென்னை மற்றும் புறநகரில் இருந்து மின்சார ரயில்களில் சென்னை கடற்கரைக்கு வந்த மக்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது.
குறிப்பாக செங்கல்பட்டு - கடற்கரை, திருவள்ளூர்- சென்ட்ரல் , வேளச்சேரி - சிந்தாதிரிபேட்டை ஆகிய மார்க்கங்களில் உள்ள பெரும்பாலான ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரி - சிந்தாதிரிப்பேட்டை நோக்கி இயக்கப்பட்ட மின்சார ரயில்களில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.
அதே போல் செங்கல்பட்டு, தாம்பரம், கிண்டி, நுங்கம்பாக்கம், எழும்பூர், பூங்கா, சிந்தாதிரிபேட்டை, திருமயிலை, வேளச்சேரி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் இன்று காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மக்கள் கூட்டம் அலைமோதியது. அரைமணி நேரத்துக்கு ஒருமுறை இயக்கப்பட்ட மின்சார ரயில்களில் ஏறமுடியாத அளவுக்கு கூட்டம் நிரம்பிவழிந்தது.
அதே போல் மெட்ரோவிலும் பயணிகள் சிரமத்தை சந்தித்தனர்.
சென்னையின் பல்வேறு சாலைகளிலும் காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல சாலைகளில் வாகனங்கள் மணிக்கணக்கில் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், இரு சக்கர வாகனங்களிலும் கார்களிலும் பயணம் செய்த பலர், வேறு வழியின்றி பாதி வழியிலேயே வீடு திரும்பினர். போக்குவரத்து போலீசார் போதிய அளவு இல்லாததும், உரிய திட்டமிடல் இல்லாததுமே இதற்குக் காரணம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
விமான சாகச நிகழ்ச்சி நடைபெறும் போது, கண்டுகளிக்க லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்று அறிந்தும், தமிழக அரசும், ரயில்வே துறையும் இணைந்து ஆலோசித்து, போதிய மின்சார ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யவில்லை என்று பயணிகள் குற்றச்சாட்டினர்.
ரயில்வே நிர்வாகம் வழக்கம் போலவே ஞாயிற்றுக்கிழமை மின்சார ரயில்களை குறைத்ததே இதற்கு முக்கிய காரணம்.
பிணை கைதிகளை மீட்கும் சாகசங்கள்
ஆக்ரா விமான பயிற்சி பள்ளியின் ஆகாஷ் கங்கா அணியை சேர்ந்த பாராசூட் வீரர்கள் 8,000 அடி உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்தனர். எம்ஐ-70 ஹெலிகாப்டரில் இருந்து 28 கமாண்டோ வீரர்கள் குதித்து, ஒரு கட்டிடத்தில் எதிரிகளால் பிடித்து வைக்கப்பட்ட பிணை கைதிகளை மீட்கும் சாகசத்தை நிகழ்த்தினர்.
தாம்பரம் விமானப் படை தளத்தில் இருந்து இலகு ரக சேட்டக் ஹெலிகாப்டர்கள் மூலம் வீரர்கள் மூவர்ணக் கொடியை ஏந்தியபடி பாராசூட் மூலம் குதித்தனர். நவீன போர் விமானமான 'சூப்பர்சானிக் ரஃபேல்' வானில் தீப்பிழம்புகளை கக்கியபடி சென்றது.
விமானப் படையில் 1947-89 காலகட்டத்தில் முக்கிய பங்காற்றிய டகோட்டா, ஹார்வர்டு விமானங்கள் பட்டாம்பூச்சிகள்போல பறந்துவந்தன. விமானப் படையில் சேர்க்கப்பட உள்ள எச்டிடி-40 என்ற பயிற்சி விமானம், வானில் குட்டிக் கரணம் அடித்தது. 4-வது தலைமுறை போர் விமானமான 'மிராஜ் 2000', பின்னால் வந்த 2 விமானங்களுக்கு நடுவானிலேயே எரிபொருளை நிரப்பிக் காட்டியது.
உள்நாட்டு தயாரிப்பான 'தேஜஸ்' போர் விமானம் வானில் குட்டிக் கரணம் அடித்தும், செங்குத்தாக பறந்தும், 'ரிவர்ஸில்' சென்றும் சாகசம் நிகழ்த்தி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
மிகப் பெரிய போர் விமானமான சி-17 விமானத்தை பின் தொடர்ந்து விமானத்தில் வந்த சூர்யகிரண் ஏரோபாடிக் டீம் வானில் சாகசத்தில் ஈடுபட்டன.
Along with our Hon'ble Chief Minister @mkstalin, we had the opportunity of enjoying the spectacular airshow of the Indian Air Force over the bright blue skies of #ChennaiMarina.
— Udhay (@Udhaystalin) October 6, 2024
The breathtaking aerial displays and precision flying left us all in awe. It was amazing to see such… pic.twitter.com/Osi6mkdpYQ
இந்த சாகசத்தில் ஈடுபட்ட 9 விமானங்களில் ஒரு விமானத்தை சென்னையை சேர்ந்த அஜய் என்ற விமானி இயக்கினார். இந்த விமானங்கள் வானில் ஏரோடைனமிக் சாகசத்தில் ஈடுபட்டன. வானில் ஒரேஇடத்தில் நிற்கும் அளவுக்கு மிக மெதுவான வேகத்தில் வந்து சாகசம் செய்தது.
சாரங் ஹெலிகாப்டர்களின் ஏரோபாடிக் சாகசம் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. இதில் பங்கேற்ற 5 ஹெலிகாப்டர்களில் ஒரு ஹெலிகாப்டரை தமிழகத்தை சேர்ந்த கோகுல் கிருஷ்ணா, அவினாஷ் ஆகிய 2 விமானிகள் இயக்கினர்.
வான் நடனத்தில் ஈடுபடக்கூடிய சாரங் ஹெலிகாப்டர்கள் இரு திசைகளில் இருந்து ஒரே சமயத்தில் எதிரும், புதிருமாக வந்து மோதுவதுபோல சாகசத்தில் ஈடுபட்டது பரவசத்தை ஏற்படுத்தியது.
இந்த சாகச நிகழ்ச்சியில், விமானப் படையின் பல்வேறு வகையான 72 விமானங்கள் பங்கேற்றன. தாம்பரம், அரக்கோணம் மட்டுமின்றி, தஞ்சாவூர், கோவை, பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள விமானப் படைதளங்களில் இருந்தும் இந்த விமானங்கள் இயக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியை 15 லட்சம் பேர் பார்வையிட்டனர். இதன்மூலம், லிம்கா சாதனை புத்தகத்தில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றது.
இந்த சாகச காட்சிகளை முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், முப்படை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
இந்திய விமானப் படை தலைமை தளபதி அமர்ப்ரீத் சிங், விமானப் படை பயிற்சிபிரிவு தளபதி ஏர்மார்ஷல் நாகேஷ்கபூர், விமானப் படை தின அணிவகுப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏர் மார்ஷல் கே.பிரேம் குமார், தாம்பரம் விமானப் படை தளபதி ரதீஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் வெயில் மற்றும் நெரிசலால் 240 பேர் மயக்கமடைந்தனர்.
அவர்களுக்கு மெரினாவில் இருந்த தற்காலிக முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 93 பேர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி, ஓமந்தூரார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 10-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் திருவொற்றியூர் கார்த்திகேயன் (34), ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட தினேஷ்குமார் (37), கொருக்குப்பேட்டை ஜான் பாபு (56), பெருங்களத்தூர் சீனிவாசன் (52) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மெரினா காமராஜர் சாலை அருகே மயங்கி கிடந்த 55 வயது நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர்.
இந்நிலையில் இந்த பலிக்கு யார் பொறுப்பு என்று மக்கள் கேள்வியெழுப்புகிறார்கள்.