எந்த தேர்தலிலும் வாக்களிக்கப் போவதில்லை!கிராம மக்கள் முடிவு!

கு.அசோக்,
சிதிலமடைந்த சாலையால் 7 ஆண்டுகளாக அவதிப்பட்டு வரும் கிராம மக்கள் - அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் பலமுறை கோரிக்கை வைத்து அடிப்படை வசதிகளை செய்து தராததால் இனிவரும் காலங்களில் எந்த ஒரு தேர்தலிலும் வாக்களிக்கப் போவதில்லை என கிராம மக்கள் முடிவு.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் உள்ளி ஊராட்சி ஒன்றியம் கம்பவாரன்பட்டி கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் பெரும்பாலான மக்களுக்கு விவசாயம் மற்றும் கூலி வேலை தான் பிரதானம்.
இந்நிலையில் அந்த கிராமத்து மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் மாதனூர் அல்லது குடியாத்தம் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
மேலும் இந்த கிராமத்தின் வழியாக செல்லும் சாலை மார்கமாக செம்பேடு கூட்ரோடு, குடியாத்தம், போஜனாபுரம், செட்டிகுப்பம், கருணிக சமுத்திரம், கீழ்ப்பட்டி, மேல் பட்டி, என சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர்.
மேலும் விவசாயிகளிடமிருந்து பால் ஏற்றி செல்லும் வாகனம், டிராக்டர் கனரக வாகனங்கள் பள்ளி பேருந்துகள் ஏராளமான வாகனங்கள் இவ்வழியாகத்தான் சென்று வருகின்றன.
அப்படியிருக்க, இந்த சாலையானது குண்டும் குழியுமாக இருப்பதால் பல விபத்துக்கள் ஏற்படுகிறது.
இந்த பிரதான சாலை பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் இருப்பதால் அவற்றை சீரமைத்து தர வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் முதல் மாவட்ட ஆட்சியர் வரையும் மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் வரை கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால் அந்த கோரிக்கையை இதுவரை யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
எனவே இந்த கிராமத்திற்கு உடனடியாக சாலை வசதி, மின்விளக்கு,நியாய விலை கடை, போன்ற அத்தியாவசிய தேவைகளை உடனடியாக செய்து தரவேண்டும்.
தவறினால் வருகின்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் மேலும் அடையாள அட்டை வாக்காளர் அட்டையை அனைத்தும் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து விட போவதாகவும் கிராம மக்கள் முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.