ஜனநாயகத்தை காக்கக்கூடிய பெரிய பணியை நிதிஷ்குமார் தொடங்கி உள்ளார்! காட்டுத் தீயை அணைக்க கூடிய முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெறுகிறது!! கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

க.பாலகுரு,
ஜனநாயகத்தை காக்கக்கூடிய மிகப்பெரிய பணியை நிதிஷ்குமார் செய்ய உள்ளார் என்றும், காட்டுத் தீயை அணைக்க கூடிய முதல் கூட்டம் பாட்னாவில் நடை பெற உள்ளது என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் அவர்கள் பேசினார்.
தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சர்ருமான மறைந்த மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.
ரூ.12 கோடி செலவில் ஆழி தேர் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள கோட்டம் 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமாக உள்ளது. அதில் கருணாநிதியின் பொது வாழ்வை சித்தரிக்கும் அருங்காட்சியகம், நூலகம், திருமண மண்டபங்கள் ஆகியவையும் இதில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, துரைமுருகன், கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின்,டி.ஆர்.பி.ராஜா, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கனிமொழி, துர்கா ஸ்டாலின் , செல்வி மற்றும் முரசொலி செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.
கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்து முதலமைச்சர் பேசுகையில்,
பெரிய மன்னர்கள் கூட தன்னுடைய ஆட்சிக்காலத்தில் இருக்கும் போது தான் கோட்டையும்,கோட்டமும் கட்டுவார்கள்.ஆனால் நம்முடைய தலைவருக்கு திருவாரூரில் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள அத்தனை மக்களின் இதயங்களிலும் கலைஞர் வாழ்கிறார்..!
என்னுடைய தந்தை இறந்த போது, நானும் என்னுடைய சகோதரி செல்வியும் சேர்ந்து இந்த காட்டூர் பகுதியில் நிலத்தினை வாங்கினோம்..! தொடர்ந்து என்னுடைய சகோதரி செல்வியும், அமைச்சர் எ.வ.வேலு அவர்களும் இந்த கோட்டம் அமைவதற்கான பணிகளை கண்ணும் கருத்துமாக பார்த்து செதுக்கி உள்ளார்கள்.
கருணாநிதி இறுதியாக போட்டியிட்டு வெற்றி பெற்றது இந்த திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் தான்..!
தஞ்சாவூர், குளித்தலை சைதாப்பேட்டை போன்ற எண்ணற்ற தொகுதிகளில்
போட்டியிட்டாலும் தன்னுடைய இறுதி காலத்தில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சிறப்புமிக்க கலைஞர் கோட்டகத்தை கூட பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தான் திறந்து வைக்க இருந்தார்.
ஆனால், அவருடைய உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரால் வர இயலவில்லை.
காலையில் கூட என்னிடம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு தன்னுடைய வருத்தத்தை
பதிவு செய்தார்.
இந்திய நாட்டினுடைய ஜனநாயகத்தை காக்கக்கூடிய மிகப்பெரிய பணியை பீகார் மாநிலத்தின்
முதல்வர் நித்திஷ் குமாரும், துணை முதல்வர் அவர்களும் தொடங்கியுள்ளார்கள். வருகின்ற ஜூன் 23ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற உள்ளது.
இந்திய நாட்டின் ஜனநாயகத்தை காக்கக்கூடிய போர்க்களத்தில் உங்களின் தளபதியாக கலைஞரின் தளபதியாக நான் அதில் பங்கேற்ற சிறப்பிக்க உள்ளேன்.
ஜனநாயகம் என்பது வீட்டிற்கு விளக்கு..!
சர்வாதிகாரம் என்பது காட்டுத்தீ..! என்று சொன்னவர் டாக்டர் கலைஞர்.
கடந்த பத்தாண்டு காலமாக மத்தியில ஆளக்கூடிய பாரதிய ஜனதா கட்சி சர்வாதிகாரம் என்கிற காட்டு தீ போல் பரவி வருகிறது.
அதை அணைக்க வேண்டிய மிகப்பெரிய கடமை நமக்கு உள்ளது.
காட்டுத்தீயை அணைக்க கூடிய முதல் விளக்கமாக பாட்னா நகரில் நடைபெறக்கூடிய கூட்டத்தை பாட்னா முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார்.
ஜனநாயகத்தை காக்க வேண்டிய நெருக்கடியான சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.
பாஜகவை மீண்டும் ஆள விட்டால்..! கலைஞர் நேசித்த தமிழ்நாடு என்கிற மாநிலமே இல்லாமல் போய்விடும்..
தமிழ்நாட்டில் எப்படி மதச்சார்பற்ற கூட்டணிகள் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்க்கிறோமோ..!
அதே போன்று இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்று பேசினார்.